tamilnadu

img

அந்த புகைப்படத்தில் ஒரு வெள்ளை மனிதன்:-

அந்த புகைப்படத்தில் ஒரு வெள்ளை மனிதன்:-

1968ல் நடந்த கோடைக்கால ஒலிம்பிஸ் போட்டிகளிலிருந்து ஒரு புகைப்படம். 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பதங்கங்கள் வென்ற அமெரிக்க வீரர் இருவர் வெற்றி மேடையை அவர்களின் எதிர்ப்புணர்வை காட்ட பயன்படுத்திய மகத்தான தருணத்தை பதிவு செய்த புகைப்படம். ஜான் கார்லோஸ், டாமீ ஸ்மித் என்கிற இரு கறுப்பின விளையாட்டு வீரர்கள் கால்களில் செருப்பு அணியாமல், கறுப்பு நிற கையுறையை அணிந்து கையை உயர்த்தி நின்ற புகைப்படம்.

கறுப்பின மக்களின் வறுமையை குறிக்கும் வகையில் வெற்றுக் கால்கள், கறுப்பு சிறுத்தைகளின் குறியீடான கறுப்பு கையுறை, கழுத்தில் சமத்துவத்துக்காக போராடும் Olympic Project for Human Rights என்கிற அமைப்பின் சின்னம் – வெற்றி மேடையில் இபடி நிற்க வேண்டும் என்று முடிவானது. மனித உரிமைக்காக போராடுவதென்றால் என்னவென்று உலகிற்கு காட்டுவதே அவர்களின் நோக்கம்.

ஆனால் கையுறைகள் இரண்டுதான் இருந்தது. அப்போதுதான் அந்த யோசனையை சொன்னார் புகைப்படத்தில் சம்மந்தமேயில்லாதது போல நின்று கொண்டிருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வெள்ளை மனிதர் பீட்டர் நார்மேன். இருவரும் ஆளுக்கொரு கையுறையை போட்டுக்கொள்ளலாம். அதற்கு சற்று நேரத்துக்கு முன்புதான் கார்லோசும் ஸ்மித்தும் நார்மேனிடம் சில கேள்விகள் கேட்டிருந்தார்கள். “உங்களுக்கு மனித உரிமைகளில் நம்பிக்கை இருக்கிறதா? கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?”

“அவரது பார்வையில் பயம் தெரியும் என்று எதிர்பார்த்தோம்” என்கிறார் கார்லோஸ். ஆனால் அன்பு தெரிந்தது. அவர்கள் கழுத்தில் அணிந்திருந்த சின்னம் தனக்கும் வேண்டுமென்று நார்மேன் கேட்டார். “நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதை நானும் நம்புகிறேன்”. அவர்களிடம் அந்த சின்னம் இல்லை, ஆனால் அந்த அமைப்பின் தன்னார்வலர் பால் ஹாப்மேன் ஒரு நொடி கூடயோசிக்காமல் தனது சின்னத்தை நார்மேன் கழுத்தில் அணிந்துக் கொள்ள தந்தார். அது ஒரு மகத்தான தருணம். எதிர்ப்புணர்வில் புது வரலாறு.

அதை படைத்த மூவரும் வெவ்வேறு விதமான எதிர்வினைகளை சந்தித்தார்கள். அமெரிக்க கறுப்பின வீரர்கள் கடும் அடக்குமுறையை சந்தித்தார்கள். இறுதியில் அவர்களது எதிர்ப்புணர்வின் நோக்கத்தையும் நியாயத்தையும் புரிந்து கொண்ட சமூகம் அவர்களுக்கு சிலை வைத்துக் கொண்டாடியது. அந்த சிலையில் பீட்டர் நார்மேன் இல்லை.

ஆனால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு எதிராக ஒரு தேசமே திரண்டது. அவர் ஒலிம்பிக்கில் தொடர்ந்து பங்கெடுக்க முடியவில்லை. வேலையில்லை. கடும் திண்டாட்டத்தில் குடும்பம். ஒரு மன்னிப்பு கேட்டிருந்தால் நிலைமை மாறியிருக்கும். ஆனால் நார்மேன் கேட்கவில்லை. அவரைப் பொறுத்தரையில் அந்த கறுப்பின வீரர்களின் செயல் நியாயமானது. 2006ல் நார்மேன் இறந்த போது அவரது சவப்பெட்டியை சுமந்தவர்களில் கார்லோசும் ஸ்மித்தும் இருந்தார்கள். அதற்கு ஆறு வருடங்களுக்கு பிறகுதான் ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் நார்மேனிடம் மன்னிப்பு கேட்கும் தீர்மானத்தை இயற்றியது.

அவரது உறவினர் ஒருவர் எடுத்திருக்கும் சல்யூட் என்கிற ஆவணப்படத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறார் நார்மேன்: “அதே குளத்திலிருந்து ஒரு கறுப்பினத்தவர் ஏன் தண்ணீர் குடிக்க கூடாது என்று எனக்கு புரியவில்லை? ஒரு வெள்ளை மனிதன் போகும் அதே பேருந்தில் ஏன் போக கூடாது? அதே பள்ளிக்கூடத்தில் ஏன் படிக்க கூடாது? நான் எங்கிருந்து வந்தேனோ அந்த இடத்தில் இருந்து கொண்டு இந்த சமூக அநீதியை எதிர்த்து என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் நான் அதை நிச்சயமாக வெறுத்தேன். வெற்றி மேடையில் அந்த சம்பவம் எனது வெள்ளிப் பதக்கத்திலிருந்து, எனது ஆட்டத்திலிருந்து உலகின் கவனத்தை திருப்பிவிட்டதாக சொல்கிறார்கள். மாறாக, நான் அந்த சம்பவத்தின் ஒரு பகுதியாக இருந்தேன் என்பதில் மிகுந்த பெருமை அடைகிறேன்”.

வெறும் வெள்ளிப்பதக்கம் மட்டுமென்றால் வரலாற்றில் இருந்திருப்பார். நார்மேன் இப்போது வரலாறாய் இருக்கிறார்.

நேற்று அந்த வரலாறின் பிறந்தநாள்.

நன்றி: https://thewire.in/sport/peter-norman-the-white-man-in-that-photo
 

தமிழில்:- Sundar Rajan