அமெரிக்காவில், நாக்லேரியா பொலேரி (Naegleria fowleri) என்ற அமீபாவால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த லில்லி மே அவண்ட் என்ற 10 வயது சிறுமி, தனது குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன்பு பிராசோஸ் ஆற்றுப்படுகைக்கு சென்று ஆற்றில் நீச்சலடித்து விளையாடிய உள்ளார். சில நாட்களுக்கு பிறகு, லில்லிக்கு திடீரென காய்ச்சல் மற்றும் தலைவலி ஏற்பட்டது. பின்னர் சுயநினைவு இழந்த நிலையில், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் அந்த சிறுமியை பரிசோதித்தபோது, நாக்லேரியா பொலேரி (Naegleria fowleri) எனும் அமீபாவால் அவர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுமி, குக் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாக்லேரியா பொலேரி (Naegleria fowleri) எனும் அமீபா நல்ல நீரில் இருக்கக்கூடிய உயிரினம் ஆகும். இது மூக்கின் வழியாக நமது உடலுக்குள் நுழைந்து, ஒருவரின் மூளை திசுக்களை தாக்கி அழிக்கக்கூடியது. அமெரிக்காவில் கடந்த 10 வருடத்தில், 34 பேர் இந்த வகை அமீபாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.