மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் தற்போது உப்பு உற்பத்தி அதிகளவில் நடந்து வருகிறது.
தமிழகத்தில் வேதாரண்யம், தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் மரக்காணம் உப்பளம் மூன்றாவது இடத்தில் உள்ளது. மரக்காணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மத்திய- மாநில அரசுகளுக்கு சொந்தமான 2ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பிலும், தனியாருக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பிலும் பாத்திகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உப்பளங்கள் பக்கிங்காம் கால்வாயை ஒட்டி இருப்பதால் அங்கிருந்து கழுவெளிப் பகுதிகளுக்கு கடல் நீர் கொண்டு வரப்பட்டு உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் துவங்கும் உப்பு உற்பத்தியானது ஜூலை மாதம் வரை நடைபெறும். ஒவ்வொரு சீசனிலும் 50 ஆயிரம் டன் அளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யும் உப்பு, உப்பளங்களில் மொத்தமாக சேகரிக்கப்பட்டு மூட்டைகளாகவும், ஒரு கிலோ பாக்கெட்டுகளாகவும் தயார் செய்யப்பட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் தென்மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்படு கிறது. அயோடின் கலந்த உப்பும் இங்கு தயாரிக்கப் பட்டு வருகிறது. கோடை வெப்பம் காரணமாக மரக்காணத்தில் அதிக அளவில் உப்பு உற்பத்தியும் நடைபெறுகிறது.