tamilnadu

செங்கல் சூளையிலிருந்த கொத்தடிமைகள் மீட்பு

வேலூர், மே 18-வேலூரை அடுத்த கணியம்பாடி புதூரில் உள்ள, ஒரு செங்கல் சூளையில் தொழிலாளர்கள், கொத்தடிமையாக பணி புரிந்து வந்தனர். இது குறித்து, மக்களுக்கான மறு வாழ்வு சங்க துணை தலைவி கோவிந்தம் மாள் அளித்த தகவலின்படி, வேலூர் சார் ஆட்சியர் மெகராஜ், வேலூர் தாசில்தார் ரமேஷ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.புதூரை சேர்ந்த கண்ணன்,( 56), என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில், விசாரணை செய்தனர். அதில், திருவண்ணா மலை மாவட்டம், வந்தவாசி அடுத்த, அரசூர் பகுதியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த முரளி(67), அவரது மனைவி பரிமளா, (60), மகள்கள் பிரியா, (30), நித்யா, (28), அவரது கணவர் ராமு, (30), அவரது மகன் வினோத்,( 10), ஆகியோர், பணி புரிந்து வந்தனர். அவர்கள், 30 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு, நான்கு ஆண்டுகளாக, கண்ணன் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்தது தெரிந்தது. இதையடுத்து, அவர்கள் ஆறு பேரும் மீட்கப்பட்டனர். செங்கல் சூளை உரிமையாளர் கண்ணனிடம் விசாரணை நடந்து வருகிறது.