tamilnadu

img

அமெரிக்காவில் உள்நாட்டு நெருக்கடி தீவிரமாகியுள்ளது

ரஷ்ய ஜனாதிபதி புடின் விமர்சனம்

மாஸ்கோ, ஜுன் 16- அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இனவெறிக்கு எதிராக பெரும் வீச்சோடு எழுந்துள்ள போராட்டங்கள், அந்நாட்டில் எழுந்துள்ள மிக ஆழமான உள்நாட்டு நெருக்கடியின் தீவிரத்தையே வெளிப்படுத்துகிறது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கடந்த ஞாயிறன்று வெளிப்படுத்தியுள்ள கருத்து சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ரஷ்யா 1 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் இக்கருத்தை வெளிப்படுத்தியுள்ள அவர், அமெரிக்காவில் எழுந்துள்ள போராட்ட அலையை கொரோனா வைரஸ் தொற்றுடன் ஒப்பிட்டுள்ளார். “அங்கு (அமெரிக்காவில்) ஏராளமான பிரச்சனைகள் உள்ளன என்பதையே இது காட்டுகிறது. கொரோனா தொற்றை எதிர்கொள்வதில் எழுந்துள்ள பாதகமான நிலைமையும் ஏற்கெனவே இருக்கிற பொது பிரச்சனைகளும் இணைந்து கொண்டுள்ளன” என்று புடின் கூறியுள்ளார்.

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த புடின், இந்தப் பிரச்சனையில் ரஷ்யாவை அமெரிக்காவுடன் ஒப்பிடாதீர்கள்; இங்கு உயிர்சேதத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம்; அமெரிக்காவில் அப்படி நடக்கவில்லை எனக் குறிப்பிட்டார். ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு சுமார் 6 லட்சத்தை எட்டியுள்ளது. எனினும் பலி எண்ணிக்கை கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 20லட்சத்தை தாண்டி சென்றிருக்கிறது. உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் அமெரிக்கா தனது மக்களை கொரோனாவுக்கு பலி கொடுத்துள்ளது.  இதுதொடர்பாக தனது வார்த்தைகளில் விளக்கியுள்ள புடின், “அமெரிக்காவில் எழுந்துள்ள தற்போதைய நிலைமையை திறம்பட எதிர்கொள்ளும் விதத்தில் ஒரு வலுவான தலைமை இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அங்கு சில நபர்களின் நலன்களை, சில குறிப்பிட்ட தரப்பினரின் நலன்களை பாதுகாப்பதற்கான முயற்சிகள்தான் பிரதானமாக உள்ளன; மாறாக ஒட்டுமொத்த சமூகத்தின் - ஒட்டுமொத்த மக்களின் நலன்கள் பிரதானமாக பார்க்கப்படவில்லை. அங்கு பல மாகாணங்களின் - பல பிராந்தியங்களின் அரசுகள், மைய அரசு சொல்வதை நம்பத்தயாராக இல்லை. ஜனாதிபதி கூறுவது தவறானது என்று பல பிராந்தியங்களின் கவர்னர்கள் சொல்கிறார்கள்” என்று விவரித்து, விமர்சித்துள்ளார்.