tamilnadu

பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு கைவிடப்பட்ட விவசாயிகள் சங்கத்தின் காத்திருப்பு போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 26- உய்யகொண்டான் மற்றும் கோரையாற்றில் படர்ந்து பாசனத்திற்கு தடை செய்யும் ஆகாயத் தாமரைகளை உடனே அகற்ற வேண்டும். முக்கொம்பு மேலணையில் இடியும் நிலையில் உள்ள பவர்ஹவுசை உடனே புதிதாக கட்ட வேண்டும். கீழகல்கண்டார்கோட்டை ஐயர் குழுமியை உடனே சீர்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் மாநகர் மாவட்டக்குழு சார்பில் பொதுப்பணித்துறை மண்டல அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மேற்கு வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் கே.சி.பாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினர் முருகன், மாநகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், கிராமநிர்வாக அலுவலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், உய்யகொண்டான் வாய்க்காலில் தற்போது தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் வரும் 30-ந் தேதிக்கு பின் ஆகாயத்தாமரைகளை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சிக்குட்பட்ட 63வது வார்டிலுள்ள குவளை வாய்க்கால் கரையில் மயான மண்டப கட்டிடம் மற்றும் காத்திருப்போர் மண்டபம் கட்ட பொதுப்பணித்துறையால் கடிதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதையடுத்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.