இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2025 ஜூன் 25, 26 ஆகிய தேதிகளில் திருச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் அசோக் தாவ்லே, கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநில செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன், கே.பாலபாரதி, உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். முதல் நாளில் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு;
தீர்மானம் 1:
ஜூலை 9 அகில இந்திய வேலை நிறுத்தம் – வெற்றி பெறச் செய்வீர்!
இந்திய அளவில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் மத்திய சம்மேளனங்கள் சார்பில் ஜூலை 9 அன்று பொது வேலை நிறுத்தத்திற்கான அறைகூவல் விடுத்துள்ளன. ஒன்றிய பாஜக அரசு கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை கடைப்பிடித்து தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கையாண்டு வருகிறது. போராடி பெற்ற சட்ட உரிமைகளை பறித்து, சுரண்டலைத் தீவிரப்படுத்தும் வகையில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை செய்துள்ளது. அனைத்து மாநில அரசுகளையும் மேற்படிச் சட்டங்களுக்கான விதிகளை உருவாக்கி அமலாக்கிட கட்டாயப்படுத்துகிறது. இந்த சட்ட திருத்தங்கள், தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிப்பதற்கும், ஆட்குறைப்பு செய்வதற்கும் ஏதுவானதாக உள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு குறித்து எதுவும் பேசாத ஒன்றாக உள்ளது. எனவே, அனைத்து ஜனநாயக அமைப்புகளும், கார்ப்பரேட் ஆதரவு சட்டத் தொகுப்பை முறியடிக்க போராட வேண்டியது அவசியம்.
மக்களுக்கு சேவை செய்யவும், அரசு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களையும், பங்குகளையும் கார்ப்பரேட் ஆதரவு பாஜக அரசு, தனியாருக்கு தாராளமாக விற்பனை செய்து வருகிறது. வேலை வாய்ப்பு என்ற பெயரில், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. உண்மையில் பன்னாட்டு நிறுவனங்கள் எதிர் பார்த்த அளவில் வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை. மாறாக, தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பறித்து வருகிறது. கிராமப்புற விவசாயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக புலம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களுக்கு குறைவான கூலி மற்றும் அதிக வேலை நேரம் என கடுமையாக சுரண்டி வருகிறது. இந்த அணுகுமுறை கட்டுப்படுத்தப்படுவதன் மூலமே, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றம் பெறும்.
கிராமப்புற தொழிலாளர்கள் வாழ்க்கையில் மேம்பாடு காண தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்தினை 200 நாட்களாக உயர்த்தவும், ஒரு நாள் கூலியை ரூ.600 ஆக அதிகரிக்கவும் வேண்டும் என்பது முக்கிய கோரிக்கை. ஆனால் மோடி அரசு இந்த சட்ட அமலாக்கத்திற்கான நிதியை குறைத்த காரணத்தால், கோடிக்கணக்கான மக்கள் இத்திட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். இந்த கோரிக்கை மீதும் தொழிற்சங்கங்கள் வெளிப்படுத்தும் உணர்வு மிக நியாயமானது. அந்த அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஜூலை 9 அன்று நடைபெற உள்ள வேலை நிறுத்தத்தை ஆதரிக்கிறது. இதர ஜனநாயக சக்திகளும் இந்த வேலை நிறுத்தத்தை ஆதரிக்க வேண்டுகோள் விடுக்கிறது.
அதுமட்டுமல்ல, ஜூலை 9 அன்று வேலை நிறுத்தம் நடைபெறும் நாளில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் மறியல் உள்ளிட்ட கிளர்ச்சி போராட்டங்களில் ஐக்கிய விவசாயிகளின் முன்னணி அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகளும் ஆதரித்து பங்கெடுப்பதாக அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் இந்த போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டு வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 2;
சமஸ்கிருத மொழிக்கு அதீத நிதி; செம்மொழி தமிழுக்கு அநீதி! மோடி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தபிறகு, 2014 – 2015 ஆண்டு முதல் 2024 – 2025 வரையிலான பத்தாண்டுகளில் சமஸ்கிருத மொழிக்கு மட்டும் 2,532.59 கோடி ரூபாய் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட 5 மொழிகளுக்கு ரூ.147.56 கோடி மட்டுமே ஒன்றிய அரசினால் செலவிடப்பட்டுள்ளது.
செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழ் மொழிக்கு மோடி அரசு இந்திய மொழிகள் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை வழங்கியது ரூ.113.48 கோடி மட்டுமே. இது சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட 22 மடங்கு குறைவாகும்.
இந்த 5 மொழிகளின் வளர்ச்சிக்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகையை விட சமஸ்கிருத மொழிக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட தொகை 17 மடங்கு அதிகமாகும். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளியாகியுள்ள மேற்கண்ட தகவல் ஒற்றைத் தன்மையை திணிக்கும் ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பினால் இயக்கப்படும் பாஜக தலைமையிலான அரசு அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருதம் மற்றும் இந்தித் திணிப்பிலேயே முனைப்பாக உள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை என்பதும் சமஸ்கிருத, இந்தி ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரசியல் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளை சம அந்தஸ்து கொடுத்து ஒன்றிய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை மோடி அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
ஆர்.எஸ்.எஸ் கருத்தியல் அடிப்படையிலேயே சமஸ்கிருதத்திற்கு அதீத நிதியும், இன்றைக்கும் வாழ்வியல் மொழியாக திகழும் தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளுக்கு மிகக் குறைவான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழர் பண்பாட்டின் தொன்மையை எடுத்துரைக்கும் கீழடி அகழ்வாய்வு அறிக்கையை வெளியிட மோடி அரசு மறுப்பதும் தமிழ் மொழி மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும், இந்தியாவின் பன்முக பண்பாட்டு வளர்ச்சி மீதும் ஒன்றிய அரசுக்கு இருக்கும் வன்மமே ஆகும்.
தமிழ் மொழி மீது பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் வெளிப்படுத்தும் “புகழ் மொழிகள்” வெறும் போலி நாடகமே என்பதை இப்போது வெளியாகியுள்ள புள்ளி விவரங்களும் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
ஒன்றிய அரசின் இத்தகைய பாரபட்ச நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ் உள்ளிட்ட அனைத்து செம்மொழிகளுக்கும், இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளுக்கும் நியாயமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று மாநிலக்குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
இரண்டாம் நாள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு..
தீர்மானம் 1 :
ரயில் கட்டண உயர்வை திரும்ப பெற ஒன்றிய அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
ஒன்றிய பாஜக அரசு எதிர்வரும் ஜூலை 1 முதல் பயணிகளுக்கான ரயில் கட்டணத்தை உயர்த்த போவதாக செய்தி வெளியாகியுள்ளது. இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. கடந்த 2024 மற்றும் 2025 ஆண்டு வரவு-செலவில் ரயில்வே ரூபாய் 75,750 கோடி வருவாயை பயணிகள் மூலம் ஈட்டியுள்ளது.
ரயில் பயணம் மக்களின் மிக அத்தியாவசிய தேவையாக உள்ளது. முன்பதிவு செய்யாமல் 634 கோடி பேரும், முன்பதிவு செய்து 800 கோடி பேரும் கடந்த ஓராண்டில் பயணம் செய்திருப்பது ரயிலின் பயன்பாடு குறித்து சுட்டிக்காட்டுகிறது. ஏற்கனவே, இந்திய ரயில்வே துறை முதியோருக்கான கட்டண சலுகையை ரத்து செய்தது, முன்பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கை குறைவு ஆகியவை எளிய மக்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், லாப நோக்கத்i அதிகப்படுத்துவதாகவும் உள்ளது. மக்களின் மிக அத்தியாவசிய தேவையில் இரண்டற கலந்துள்ள ரயில் பயணத்தின் கட்டணத்தை உயர்த்துவது, பைசா கணக்கில் இருந்தாலும் ஏற்க முடியாதது ஆகும். மக்கள் தலையில் சுமையை ஏற்றும் கொள்கை என்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்படி முடிவை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டுமென்றும், அனைத்து பகுதி மக்களும் பாஜக அரசின் மக்கள் மீதான இந்த தாக்குதலை வலுவாக எதிர்த்திட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 2
ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டணமில்லா டயாலிசிஸ் சிகிச்சை! தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு, தனியார் பங்களிப்புடன் கூடிய டயாலிசிஸ் சிகிச்சை திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தனியார் மருத்துவமனைகள் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் டயாலிசிஸ் கருவிகளை அமைத்தும் ஊழியர்களை நியமனம் செய்தும் சிகிச்சை அளித்து அதற்கான கட்டணத்தை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்துறை கட்டமைப்பின் மூலமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் கருவிகளை அரசே நிறுவி, நிரந்தர அடிப்படையில் டயாலிசிஸ் டெக்னீசியன்களை பணி நியமனம் செய்தும், அரசு பொது மருத்துவர்கள் மூலம் கிசிக்கை அளித்தால் மட்டுமே ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களில் உள்ள பாதிக்கப்பட்டோர்களுக்கு தரமான சிகிச்சை கிடைக்கும். மாறாக, தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தரமான சிகிச்சை உரிய நேரத்தில் இலவசமாக கிடைக்க வாய்ப்பில்லாமல் போகும். ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்வதற்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இல்லாதோர் பணம் செலுத்த வேண்டிய நிலையில் இருப்பது போல், பணம் செலுத்தி டயாலிசிஸ் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
தமிழக அரசு பொது சுகாதார கட்டமைப்பின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு முற்றிலும் இலவசமான தரமான சிகிச்சை வழங்கும் நடைமுறையில் இருந்து தன்னை விலக்கிக் கொள்வதை நிறுத்துவதோடு தனியார் மயத்தை அனுமதிக்கிற இந்த நடவடிக்கையை கைவிட்டு சுகாதாரத்துறை கட்டமைப்பின் விரிவாக்கத்திற்கு ஏற்றார்போல் போதிய எண்ணிக்கையில் நிரந்தர ஊழியர்களைக் கொண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் பணியை தமிழக அரசு விரைவாக செயல்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.