tamilnadu

img

புதுப்பட்டினம் ஊராட்சி அலட்சியம்

சீர்காழி, மே 12-நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் கடை வீதியிலிருந்து ஈமச்சடங்கு கட்டிடத்துக்கு செல்லும் புதுமண்ணியாற்றாங்கரை சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு குவியல் குவியலாகக் குப்பைகள் கிடக்கின்றன. குப்பைகள் காற்றில் பறந்து அருகில் உள்ள ஈமச்சடங்கு செய்யும் மண்டபம் அமைந்துள்ள பகுதி மற்றும் அப்பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளி அமைந்த பகுதியிலும் சென்று குவிகிறது. இதனால் சுற்றுப்புறச் சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.ஊராட்சி சார்பில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சி செய்யும் வகையில் அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டும் குப்பைகளை முறையாக சேகரிக்கவில்லை. புதுப்பட்டினம் ஊராட்சிக்கென்று 10-க்கும் மேற்பட்ட நடமாடும் குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டும் ஊராட்சி நிர்வாகம் அதனை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சியின் பல பகுதிகளில் திறந்த வெளியிலேயே குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. எனவே குப்பைகளை பொது இடங்களில் கொட்டுவதை உடனடியாக தடை செய்யவும், அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுப்பட்டினம் வியாபாரிகள் சங்கத் தலைவர் குபேந்திரன் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் புதுமண்ணியாற்றாங்கரையில் சாலையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள்.