tamilnadu

தரமற்ற உளுந்து விதை விவசாயிகள் சங்கம் கண்டனம்

தஞ்சாவூர், ஜூன் 9- தஞ்சாவூர் மாவட்டத்தில் தரமற்ற உளுந்து விதைகளை விவசாயிகளுக்கு விநியோகித்து விட்டு, தற்போது தங்கள் குறைகளை மறைக்க, விவசாயிகள் மீது குறை கூறுவதா என வேளாண் துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தவறிழைத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தி உள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் பட்டுக்கோட்டை எம்.செல்வம் அறிக்கையில் கூறியிருப்பதாவது, "கடந்தாண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா  புயலில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு பகுதியில் உள்ள தென்னை விவசாயிகள் 100 சதம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாகி நிற்கின்றனர்.  இந்நிலையில் தென்னை விவசாயிகளுக்கு அரசு வழங்கிய நிவாரணம் என்பது யானைப் பசிக்கு சோளப்பொறி என்பது போல் உள்ளது. குறிப்பாக வேளாண் துறை அதிகாரிகளின் குளறுபடியால் இதுவரை நிவாரணம் கிடைக்காமல் பல விவசாயிகள் சிரமமான சூழ்நிலையில் இருந்து வருகின்றனர். தென்னை விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ 35 ஆயிரம் பராமரிப்பு உதவித்தொகை அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இதுவரை கிடைக்காத நிலை உள்ளது. இந்நிலையில் தென்னை விவசாயிகளுக்கு அவர்கள் கேட்காத நிலையில் அவர்களுக்கு கோ5 நரக உளுந்து விதையை வேளாண்துறை வழங்கியது இதனை பயிரிட்ட விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். செடிகள் முளைத்தும் பூக்கவோ, காய்க்கவோ இல்லை.  இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 75 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. இது குறித்து செய்தித்தாள்களில் செய்தி வெளியானது. இதன் பிறகு வேளாண் துறை உயர் அலுவலர் ஜஸ்டின் தலைமையில், பட்டுக்கோட்டை கரம்பயம் பகுதியில் உளுந்து பயிரிட்ட விவசாயிகளை சந்தித்தும், பாதிக்கப்பட்ட உளுந்து செடிகளை பார்வையிட்டும் மாவட்ட ஆட்சியருக்கு, வேளாண் துறையினர்அறிக்கை அளித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'உளுந்து பயிரிட்ட விவசாயிகள் முறையாக பயிர் பாதுகாப்பு செய்யவில்லை என்றும், மஞ்சள் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தவில்லை' எனவும் தெரிவித்துள்ளார். இதனை ஏற்க இயலாது. இது விவசாயிகளை குறை கூறி வேளாண் துறை அதிகாரிகளை பாதுகாக்கும் முயற்சி என்பது போல் தெரியவருகிறது. வேளாண்மை துறை மூலம் புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் ரூ 40, 50 என மிகக் குறைந்த விலையில் தரமில்லாத விதைகளை வாங்கி விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.  பட்டுக்கோட்டை பிளாக்கில் மட்டும் 140 டன் உளுந்து 700 ஹெக்டேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் மதுக்கூர், சேதுபாவாசத்திரம், பேராவூரணி, திருவோணம், ஒரத்தநாடு ஆகிய பகுதிகளிலும் விவசாயிகளுக்கு உளுந்து வழங்கப்பட்டு உள்ளது. கஜா புயலை காரணம் காட்டி, தென்னை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்குவதாகக் கூறி, தரமில்லாத உளுந்து வகைகளை கொள்முதல் செய்ததில் பல லட்சக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தெரியவருகிறது.  எனவே மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட்டு, உரிய விசாரணை நடத்தி ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண்துறை அதிகாரிகள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 75 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். அரசு உரிய இழப்பீடு வழங்காவிட்டால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி ஜூன் 20ஆம் தேதி வேளாண் துறை அலுவலகம் முன்பு மனு கொடுத்து  ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.