தலைமை ஆசிரியர்கள் இடமாற்றத்தை ரத்து செய்க!
சிபிஎம் வலியுறுத்தல்
தஞ்சாவூர், ஜூன் 22- பட்டுக்கோட்டை அருகே தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரம்பயம் கிளை கூட்டம் ஆர்.ஜீவானந்தம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் எம்.செல்வம் ‘இன்றைய அரசியல் நிலவரம்’ குறித்து பேசினார். கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். "கரம்பயம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை லதா, கத்திரிக்கொல்லை தலைமை ஆசிரியை ஆனந்தி ஆகிய இரண்டு பேர் மீது எந்த தவறும் இல்லாதபோது, ஆளுங்கட்சியின் அடாவடித்தனத்துக்கு கல்வித்துறை உயர் அதிகாரிகள் அடிபணிந்து, இருவரையும் இடமாற்றம் செய்ததை வன்மையாக கண்டிப்பதோடு, மீண்டும் அவர்களை பழைய இடத்திலேயே பணியமர்த்த மாவட்ட கல்வி அலுவலர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு மீண்டும் பணியில் அமர்த்தவில்லை என்றால், மாணவர்கள், பெற்றோர்களை திரட்டி கிராம மக்கள் ஆதரவோடு ஜூலை 2 ஆம் தேதி கரம்பயத்தில், தஞ்சை-பட்டுக்கோட்டை மெயின் சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்படும். மேலும் தமிழக அரசு 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு தினந்தோறும் வேலை வழங்க வேண்டும். தினக்கூலி ரூ.212-ஐ குறையாமல் வழங்க வேண்டும். சம்பள பாக்கி நிலுவைத் தொகையையும் முழுமையாக வழங்க வேண்டும். ஊராட்சியில் நிலவக்கூடிய குடிநீர் பிரச்சனையை சரி செய்ய வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள குடி மராமத்து பணிகள் மூலம் ஏரி, குளங்களை உடனடியாகவும், முறையாகவும் தூர்வார வேண்டும்'' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தேசிய கல்விக் கொள்கை ஏழைகள், பெண்களின் கல்வி உரிமையை காவு வாங்குகிறது
கவிஞர் நா.முத்துநிலவன் கருத்து
புதுக்கோட்டை, ஜூன் 22 - தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை ஏழை மாணவர்கள் மற்றும் பெண்களின் கல்வி உரிமையை காவு வாங்குவதாக அமைந்துள்ளது என்றார் தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர்.நாமுத்துநிலவன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து ‘தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை-2019’ என்ற தலைப்பில் சனிக்கிழமை புதுக்கோட்டையில் கருத்தரங்கை நடத்தியது. இதில் நா.முத்துநிலவன் பேசியதாவது: பள்ளியில் சிறந்த மதிப்பெண் பெற்றவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்றோ? குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள் தோல்வி அடைந்துவிட்டனர் என்றோ சொல்லிவிட முடியாது. பல நேரங்களில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள் நடத்தும் நிறுவனங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் சம்பளத்திற்கு வேலைசெய்யும் நிலை உள்ளது. மெக்காலே கல்வி முறை வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான நம்பிக்கையைத் தரவில்லை. இந்நிலையில், மெக்காலே கல்வியைவிட பல மடங்கு மோசமான கல்விமுறையை தேசிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கை முன்வைக்கிறது. மூன்றாம் வகுப்பில் இருந்து பொதுத்தேர்வு தொடங்குவது பெரிய அபத்தம். இப்படி பொதுத் தேர்வுகளை நடத்துவதன் மூலம் ஏழை மாணவர்கள் மற்றும் பெண்கள் பெருமளவிற்கு மேல்படிப்புக்குச் செல்ல முடியாமல் இடைநிற்றல் ஏற்படும். தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த நூறு பேரில் 75 பேர் மட்டுமே பத்தாம் வகுப்பைத் தாண்டுகின்றனர். இந்த சராசரி உ.பி., பீகார் போன்ற மாநிலங்களில் 20 என்ற அளவில் மிகமிக குறைவாகவே உள்ளது. இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றும் தமிழகம் கல்வியில் பெரிய அளவுக்கு முன்னேறி இருக்கிறது. மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றும் வடமாநிலங்கள் எந்த அளவுக்கு தாழ்ந்து கிடக்கிறது. உ.பி போன்ற வடமாநிலங்களில் இந்தி மட்டுமே தாய்மொழி அல்ல. போகி, மைதிலி போன்ற மொழிகளைப் பேசும் மக்கள் பல லட்சக்கணக்கில் உள்ளனர்.
அவர்கள் வீட்டில் தாய் மொழியையும் பள்ளியில் வேற்று மொழியையும் கற்பதால் கற்கும் திறன் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. வட மாநிலங்களைப் போல தமிழகத்தையும் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக ஆக்கும் சூழ்ச்சியும், சமஸ்கிருதத்தை திணித்து இந்துத்துவக் கொள்கையை அமல்படுத்தும் மோசமான நடவடிக்கையும் தேசிய கல்விக்கொள்கையில் அடங்கி இருக்கிறது. இவ்வாறு பேசினார். கருத்தரங்கிற்கு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் அ.மணவாளன் தலைமை வகித்தார். தமுஎகச மாவட்டச் செயலாளர் சு.மதியழகன் வரவேற்றார். தமுஎகச மாவட்டத் தலைவர் எம்.ஸ்டாலின் சரவணன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.அரங்கசாமி, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன், அரசு பள்ளிப் பாதுகாப்பு இயக்கம் புதுகை செல்வா, ஆசிரியர் அமைப்புகளின் நிர்வாகிகள் த.ஜீவன்ராஜ், த.ராஜூ, மா.குமரேசன், கும.திருப்பதி, ஆ.மணிகண்டன், கே.ஜெயபாலன் உள்ளிட்டோர் பேசினர். முடிவில் அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ம.வீரமுத்து நன்றி கூறினார்.