tamilnadu

img

டெல்டா மாவட்ட பெண்களின் துயரம் - எஸ்.தமிழ்ச்செல்வி மாநிலச் செயலாளர், ஜனநாயக மாதர் சங்கம்

தமிழகத்தில் மக்களுக்கு உதவி செய்வது போல் மெல்ல நுழைந்த நுண் நிதி நிறுவனங்கள் புற்றீசல் போல் வளர்ந்து பூதாகாரமாக காட்சி தருகிறது.  இவர்களுடைய சூழ்ச்சி தெரியாமல் கடன் வலையில் சிக்கிக் கொண்ட பெண்கள் மீளமுடியாமல் சில பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  தமிழ்நாட்டில் மட்டும் கிராமவிடியல், ஈகுவிடாஸ், ஆசிர்வாத், ஸ்மைல், வரம், காமன்வெல்த், டீளுகுடுஇ பாரத், ளுர்யுசுநுஇ மதுரா, டாட்டா, எக்சைட், விருட்சம், ஜெயம், வெரிட்டாஸ், சக்தி, கினரா, கார்டியன், டுNவுஇ சோழமண்டலம், ஸ்ரீராம், ர்னுடீஇ ஐகுமுஇ மணப்புரம், முத்தூட், பாலமுத்தழகு, பைவ்ஸ்டார், புது ஆறு, ஜனலெட்சுமி என்று ஏராளமான நுண் நிதி நிறுவனங்கள் உள்ளன.

1992 ல் ‘நபார்டு’ வங்கி தான் முதலில் அறிமுகப்படுத்தியது.  2011 ஆய்வின் அடிப்படையில் 4,91,311 சுய உதவிக்குழுக்கள் தமிழ்நாட்டில் இருந்தன.  இதன் மூலமாகத்தான் நுண் நிதி நிறுவனங்கள் வளர்ந்து தற்பொழுது சுய உதவிக்குழுக்கள் பெரும்பாலும் சீர்குலைந்து விட்டன. 2018-2019-ல் மட்டும் நுண்நிதி நிறுவனங்கள் 38 சதம் வளர்ச்சியை அடைந்துள்ளது.  இதன் மதிப்பு கிட்டதட்ட ரூ.9.33 கோடி ஆகும். இன்றளவில் பெரும்பாலான பெண்கள் நுண் நிதி நிறுவன கடன் வலையில் சிக்கி மீளமுடியாமல் தவிக்கின்றார்கள். இவற்றிலிருந்து மீள்வதற்கு சில தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் களத்தில் இறங்கியது.  ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியது.  5 ஆண்டுகள் பணம் கட்டினால் லட்சம் லட்சமாக பணம் கிடைக்கும் எனக்கூறி மக்களை மயக்கத்தில் வீழ்த்தினர். பெண்கள் அலை அலையாய் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்தனர்.  தான் மட்டும் சேர்ந்ததோடு மட்டுமல்லாமல் துக்க வீடு, கல்யாண வீடு, பிறந்தநாள் விழா, வளைகாப்பு விழா, கோயில் திருவிழா என்று போகும் இடங்களில் வரும் உறவினர்களையும் பேசி சேர்த்து விட்டார்கள். ஒவ்வொருவருக்கும் கீழ் பல முகவர்கள் மூலமாகவும் பாலிஸி எடுத்துள்ளனர்.  பிளசிங் என்ற நிதி நிறுவனம் மட்டும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடக உட்பட 1,40,000 பாலிஸிதார்களை சேர்த்துள்ளது. 1000 கோடிக்கு மேல் மக்கள் தங்களுடைய முதலீடுகளை செலுத்தியுள்ளனர்.  வீட்டில் உள்ளவர்களும் எப்படியோ பணம் வரப்போகுது என பெண்களை தடுக்காமல் ஊக்கப்படுத்தி வந்துள்ளனர்.  சில வருடங்களிலே இந்த நிறுவனம் மூடப்படுகிறது.  இதை அறியாத பெண்கள் தொடர்ந்து பணத்தை வசூல் செய்து மூடப்பட்ட நிறுவனத்திலேயே கொடுத்து வந்திருக்கிறார்கள்.  பாலிஸி முதிர்வடைந்ததும் பாலிஸி பத்திரத்தை கொடுத்து தங்களின் முதிர்வுத் தொகையை கேட்கின்றனர்.  பத்திரத்தை பெற்றுக்கொண்ட நிறுவனத்தின் ஊழியர்கள் ஒரு வெள்ளைத் தாளில் கணிணியில் பதிவு செய்து ஒப்புகை சீட்டு கொடுத்துள்ளனர்.  பல மாதங்களாகியும் முதிர்வுத் தொகை வராததால் நம்பிக்கை இழந்த பெண்கள் தீர்வை தேடி காவல்துறையிடம் முறையிடுகிறார்கள்.

தமிழக காவல்துறையோ யாரை க்கேட்டு பணம் கொடுத்தீர்கள் இங்கே ஏன் வருகிறீர்கள் என பெண்களை இழிவுபடுத்தி கேவல மாக விரட்டி அடித்துள்ளனர். அடுத்து நம்பிக்கையோட அரசி யல் தலைவர்களிடம் போய் முறை யிடுகிறார்கள்.  எங்களுக்குத் தெரி யாது என அவர்களும் கைவிரித்து விடுகிறார்கள்.  இப்படி நாடு முழுவதும் ஏமாந்தவர்கள் பல கோடிப் பேர். எங்கே செல்வது? யாரிடம் முறையிடுவது? இவற்றிற்கு தீர்வுதான் என்ன? மோசமான மன உளைச்சலில் பல பேர் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்றுன்ளனர். பலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கஜா புயலால் அடிபட்டு கதிகலங்கி கஞ்சிக்கே வழியின்றி நிர்கதியாய் நின்றவர்களிடமும் கடன் வசூல் செய்ய நுண்நிதி நிறுவனங்கள் ஈவிரக்கமின்றி நடந்து கொண்டன. பேரிடர் காலங்களில் மக்கள் பெருமளவில் பாதித்து இருக்கும்போது கடன் வசூலில் ஈடுபடக்கூடாது என்ற பொது விதி உள்ளது.

யாரும் மதிப்பதில்லை. மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர். கடனை தள்ளுபடி செய்யக்கோரி பலகட்ட போராட்டங்களை மக்கள் நடத்தினர்.  இதன்காரணமாக உள்ளூர் மட்ட அதிகாரிகள் 6 மாதக்காலம் கடன் வசூல் செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனாலும் நுண் நிதி நிறுவனங்கள் கண்டுகொள்வதாக இல்லை.  மேலும் மேலும் நெருக்கடி கொடுத்தனர். நிவாரணத் தொகைகளைக் கூட பிடுங்கிச் சென்றனர். சில பேர் பணம் கட்ட முடியாமல் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். தமிழக முதல்வர் ஹெலிகாப்டரை விட்டு இறங்காமலே பார்த்துச் சென்றார். பாரத பிரதமர் மோடியோ திரும்பிக் கூட பார்க்கவில்லை. அரசு சிறிது கூட கண்டு கொள்ளவில்லை.  மக்கள் மீது அக்கறை இல்லாத அரசுகளிடம் எதை எதிர்ப்பார்க்க முடியும்?. இதற்கு தீர்வு காணத் தான் புதுக்கோட்டையில் கூடுகிறது மாதர் சங்க சிறப்பு மாநாடு.