நாகர்கோவில், மே.23-கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குகள் வியாழனன்று கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் எண்ணப்பட்டது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில் முதல் சுற்றிலிருந்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் எச்.வசந்தகுமார் முன்னிலையில் இருந்து வந்தார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வந்தார். மொத்தம் 28 சுற்று வாக்கு எண்ணிக்கையில் மாலை 6 மணி வரை 19 சுற்று வாக்குகளே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. மாலை 6 மணி நிலவரப்படி 7 லட்சத்து 23 ஆயிரத்து 592 வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் 2 லட்சத்து 44 ஆயிரத்து 432 வாக்குகளும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் எச்.வசந்தகுமார் 4 லட்சத்து 51 ஆயிரத்து 170 வாக்குகளும் பெற்றிருந்தனர். காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார், பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனனை விட இரண்டு லட்சத்து 6 ஆயிரத்து 738 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். இதன்மூலம் அவரது வெற்றி உறுதியானது. பொன்.ராதாகிருஷ்ணன் தோல்வி உறுதி செய்யப்பட்டது. மாலை 6.40 மணி நிலவரப்படி 2 லட்சத்து 86 ஆயிரத்து 634 வாக்குகள் வித்தியாசத்தில் எச்.வசந்தகுமார் முன்னிலை வகித்து வெற்றியை உறுதி செய்தார்.