tamilnadu

கோவில் திருக்குளம் ஆக்கிரமிப்பு: போலீசில் புகார்

மன்னார்குடி, ஜுன் 29-  திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான திருக்குளம் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோவில் வரலாற்று சிறப்புமிக்க கோவில். இங்குள்ள திருக்குளம் அகத்திய முனிவர் புனித நீராடிய குளம் என சிறப்பு பெற்றது.  இத்திருக்குளத்தின் தென்கிழக்கு மூலையில் உள்ள மேட்டுத்தெரு பகுதியில் சாமியப்பாநகர் பகுதியைச் சேர்ந்த பழனிவேல் என்பவர் கோவிலுக்குச் சொந்தமான 184/12 எண் கொண்ட இடத்தில் உள்ள பழைய வீட்டை கோவில் நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் இடித்து புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.  மேலும் கட்டிட இடிபாடுகளை வீட்டின் பின்புறத்திலுள்ள குளத்தின் பின்பகுதியில் கொட்டி ஆக்கிரமிப்பு செய்து வருகிறார். இதனை கேள்வியுற்ற திருத்துறைபூண்டி தாசில்தார் ஜெகதீசன், வருவாய் ஆய்வாளர் பெத்துராஜ், கோவில் செயல் அலுவலர் ராஜா, மேலாளர் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களை பறிமுதல் செய்து, போலீசில் செயல் அலுவலர் ராஜா புகார் செய்துள்ளார். திருத்துறைபூண்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.