மன்னார்குடி, ஆக.5- புதிய கட்டிட அனுமதிக்கு திருவாரூரிலேயே விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கான நகர் ஊரமைப்புத் துறையின் மண்டல அலுவலகம் இதுவரை தஞ்சாவூரில் செயல்பட்டு வந்தது. நில உபயோக மாற்றம், வீட்டுமனைப் பிரிவு மற்றும் கட்டிடங்களுக்கான தொழில்நுட்ப அனுமதி திட்ட அனுமதிபெற தஞ்சாவூர் மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயனடைந்து வந்தனர். தற்போது திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய அலுவலகம் அமைக்கப்பட்டு ஜூலை 27 முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இணைப்புக் கட்டிடம் அறை எண்கள் 306, 307, 3-வது தளம் என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்துக்கு நகர ஊரமைப்பு துணை இயக்குநர்(பொ) க.கிருஷ்ணமூர்த்தி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் இனி இந்த அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.