tamilnadu

இறைச்சிக் கழிவுகளை கொட்டிய வாகனம் சிறைப்பிடிப்பு

அவிநாசி, மே 11-அவிநாசி அருகே தொடர்ந்து இறைச்சிக் கழிவுகளை கொட்டி வந்த வாகனத்தை பொதுமக்கள் வெள்ளியன்று இரவு சிறைபிடித்தனர்.அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட துலுக்கமுத்தூர், அய்யம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பெருமளவு விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள தோட்டத்துப் பகுதிகள், சாலையோரங்களில் சுகாதாரக்கேடு ஏற்படுத்தும் வகையில் துர்நாற்றம் வீசும்இறைச்சிக் கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி வந்தனர். இதனால் கால்நடைகள் உள்பட பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகி வந்தனர். இதைத் தடுக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையில் வெள்ளியன்று இரவு துலுக்கமுத்தூர் அருகே கானாங்குளம் பொய்யேரிப் பகுதியில் இறைச்சிக் கழிவுகளைக் கொட்ட வந்த சரக்கு ஆட்டோவை பொதுமக்கள் சிறைபிடித்து அவிநாசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் புகார் மனுவும் அளித்தனர். இதன்பேரில் அவிநாசி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.