தேனி:
ஆண்டிபட்டி அருகே வாக்குச்சாவடி முன்பு வாக்கு சேகரித்த அரசியல் கட்சியினர் 3 பேர் மீது போலீசார் செவ்வாய்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.ஆண்டிபட்டி சட்டப் பேரவை தொகுதியில் செவ்வாய்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.வாக்குப் பதிவின் போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், போலீசார் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது க.விலக்கு அருகே சிலோன் காலனி பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிமுன்பு தேர்தல் விதிகளை மீறி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட அமமுக ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், உதய் ஆகிய 2 பேரையும் பிடித்த தேர்தல் பறக்கும் படையினர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த னர். இதுகுறித்து க.விலக்கு போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோன்று கண்டமனூர் அருகே ராஜேந்திரா நகர்ப் பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ராஜேந்திரன் என்பவர் தேர்தல் விதிகளை மீறி வாக்குச் சாவடிக் குள் சென்று வாக்கு சேகரித்ததாக தேர்தல்அலுவலர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் கண்டமனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.