தஞ்சாவூர், ஜூலை 13- தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை துப்புரவு பணியாளர்கள் நிலை குறித்த, அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை முன்னிலையில் நடைபெற்றது. தேசிய துப்புரவு தொழிலாளர் ஆணைய உறுப்பினர் ஜகதீஷ் ஹிர்மானி தலைமை வகித்து பேசுகையில், துப்புரவு தொழிலாளர்கள், அவர்களது குழந்தைகள் மிக மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இதனால் 80 சதவீதம் பேர் ஓய்வுக்கு முன்னதாகவே இறந்து விடுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் அளிக்கவும் அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வீடு இல்லாத துப்புரவு தொழிலாளர்களுக்கு, அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தர வேண்டும். இதுகுறித்து பட்டியல் தயாரிக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள 2,500 துப்புரவு தொழிலாளர்களில், 2000 பேருக்கு வீடுகள் இல்லை எனத் தெரிய வருகிறது மனிதர்கள் மூலமாகவே மனித கழிவுகளை அகற்றும் நிலையை மாற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு பணிகளை நிரந்தரப்படுத்த வேண்டும். தொழிலாளர்கள் வன்கொடுமைக்கு ஆளானால், ஆணையத்தில் புகார் அளிக்க வேண்டும். துப்புரவு தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.450 வழங்க வேண்டும். துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி கற்கவும், சுய தொழில் தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். பின்னர், தஞ்சை மாநகராட்சி, கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சி மற்றும் 22 பேரூராட்சிகளில் பணிபுரியும் நிரந்தர மற்றும் தற்காலிக துப்புரவு பணியாளர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றை களைவதற்கு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினார். தொடர்ந்து தஞ்சாவூர் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் 15 பேருக்கு மழைக் கோட்டுகள், துப்புரவு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினார்.