சிறப்பு அந்தஸ்து பெற்று இந்தியாவின் செல்லப் பிள்ளையாக இருந்த ஜம்மு காஷ் மீரைப் பாசிச பாஜக அரசு இரண்டு பகுதியாக (ஜம்மு,லடாக்) பிரித்து எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றி மேலும் பிரிவினையை தூண்டியுள்ளது. காஷ்மீர் பிரச்சனையால் பாகிஸ்தான் அரசு இந்தியாவிற்கு எதிராக அரசியல் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் செப்டம்பர் 14, 15-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 55 ஆண்டுகளுக்குப் பிறகு டென்னிஸ் விளை யாடப் பாகிஸ்தான் நாட்டிற்கு இந்திய அணி செல்ல இருப்பதால் இந்த தொடரை இரு நாட்டு டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார்கள்.
ஆனால் காஷ்மீர் பிரச்சனையால் இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்வது சிரமமான காரியம் தான். பாதுகாப்பு பிரச்சனையைக் காரணம் காட்டி மத்திய அரசு அனுமதி வழங்குமா? என்பது தான் மிகப்பெரிய சந்தேகம். இரண்டாவது காஷ்மீர் பிரிப்பால் பாகிஸ்தான் அரசு தங்கள் நாட்டுத் தூதரைத் திரும்பி பெறும் அளவிற்குக் கோபமாக இருப்பதால் இந்திய டென்னிஸ் வீரர்களுக்கு விசா வழங்க விரும்பாது. ஒருவேளை பாகிஸ்தான் அரசு இந்திய வீரர்களுக்கு விசா அளித்த பின்பும் மத்திய அரசு வீரர்களை அனுப்பாவிட்டால் இந்திய டென்னிஸ் சம்மேளனம் அபராதத்தைச் சந்திக்க நேரிடும். கடந்த முறை ஹாங்காங் அணி பாதுகாப்பு பிரச்சனையைக் காரணம் காட்டி பாகிஸ்தான் செல்ல மறுத்ததற்காகச் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் 10000 டாலர் அபராதத்தையும், ஆசியப் பிரிவில் கடைசி இடத்தையும் அளித்தது. மத்திய அரசு முடிவுக்காகக் காத்திருப்போம் என இந்திய டென்னிஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.