tamilnadu

img

நீதான் முன்னே!

தம்மைத் தோண்டுவோர் தன்னை விழாமல்

 தாங்கிடும் நிலமாய் வாழ்ந்திடு!- பிறர்

வெம்மை இகழ்மொழி தன்னைப் பொறுத்திடு

  வெற்றியால் மண்ணில் ஆழ்ந்திடு!


பிறர்செய் தீமை பொறுத்தல் நல்லது

 பின்னும் அதைநீ மறந்திடு!- வறுமை

விருந்தினர் போற்றா திருத்தல், வலிமை 

 வன்மொழி பொறுத்தல் உரைத்திடு! 


பொறுமை உரைவிடம் நீயாய் இருந்திடு

 போற்றும் உலகம் மனிதனாய்!- அவர்

சிறுமைச் செயல்களைப் பொறுத்திடு உன்னை

 சிறப்புடன் போற்றுவர் பொன்னாய்!


கேட்டினை மறந்தால் வாழ்நாள் முழுதும்

 கேடில்லா இன்பம் சுரக்கும்! –அவர்

கேட்டினை மறக்கா தீமை புரிந்திடின்

 கேடுடை இன்பம் பிறக்கும்!


கேடுக்கு கேடு செய்திடின் இன்பம்

 கிடைத்திடும் ஒருநாள் மட்டும்!-அவர்

கேட்டினை மறந்தால் வாழ்நாள் முழுதும்

 கிடைத்திடும் புகழ்திக் கெட்டும்!


பழிக்குப் பழியெனப் பிறர்க்குச் செய்யாப்

 பண்பினை நாளும் உயர்த்து!-நீ

அழியும் ஆணவக் குணத்தினர் தம்மை

 ஆற்றல் பொறுமையால் அயர்த்து!


எல்லை கடந்த துன்பம் செய்தவர்

 எரிசொல் அதனைப் பொறுத்திடு!-என்றும்

நல்ல துறவியாய் நானிலம் போற்றும்

 நாளும் அதனைக் காத்திடு!


உண்ணா திருந்து நோன்பினை நோற்பவர்

 உலகில் பொறுமைப் பின்னே!-அவர்

கண்ணாய்ப் போற்றும் பொறுமை போற்றுக

 காட்சியில் நீதான் முன்னே!