சிம்லா, ஜூன் 12 - இமாச்சலப் பிரதேசத்தின் ஹிக்கிம் கிராமம் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் இடம் அதிக மலைகளை கொண்ட இப்பகுதியில் 14 ஆயிரத்து 567 அடி உயர மலையின் உச்சியில் அஞ்சலகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த அஞ்சலகம்தான் உலகிலேயே மிக உயரமான அஞ்சலகம் எனும் பெருமையைக் கொண்டுள்ளது. இந்த அஞ்சலகத்தை காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். 1983ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த அஞ்சலகத்தில் தற்போது ரின்சென் செர்ரிங் என்பவர் தபால் நிலைய அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த பயணத்தின் நினைவாக அஞ்சலகத்தில் விற்கப்படும் ஸ்டாம்ப்களை சுற்றுலா பயணிகள் வாங்கிச் செல்கின்றனர். மேலும் இயற்கையை ரசிக்க நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், இந்த அஞ்சலகம் மிகுந்த இயற்கை அழகுடன் காணப்படுகிறது என்றும் சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.