சேலம்,செப்.19- பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு கூட்டம் சேலம் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி வளாகத்தில் வியாழனன்று நடை பெற்றது. தூய்மையே சேவை இயக்கம் 2019 கீழ் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண்-5ல் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி வளாகத்தில், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு உறுதி மொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்விற்கு மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ் தலைமை தாங்கி பேசுகையில், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் தமிழ்நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதன்படி மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளி வளாகங்கள் ஆகியவற்றில் பயன்படுத்துவது முற்றிலுமாக தடை செய்ய அறிவிக்கை வெளியிடப்பட்டு, தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 5 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர் கண் காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்குழுவினர் மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவ னங்களின் திடீர் தணிக்கை மேற்கொண்டு வருவதாக ஆணையாளர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி வளாகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்த உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இந் நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் மரு.கே.பார்த்திபன், உதவி செயற்பொறியாளர் .வி.திலகா, உதவி பொறியாளர் எஸ்.செந்தில்குமார், ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர்.ஆர்.உமா ராணி , சுகாதார அலுவலர் கே.ரவிச்சந்தர், சுகாதார ஆய்வாளர் என்.சங்கர் மற்றும் மாணவியர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.