கோவிட் நிவாரணமாக கேரள முதல்வர் அறிவித்த குடும்பஸ்ரீ மூலம் ரூ.2,000 கோடிக்கான கடன்கள் அயல்கூட்டம் சுய உதவிக்குழுக்களின் வங்கி கணக்கில் ஏப்ரல் பத்தாம் தேதிக்குள் செலுத்தப்பட உள்ளது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான வட்டியை அரசே செலுத்தும். மாநில அளவிலான வங்கியாளர் குழுவுடன் (எஸ்எல்பிசி) வியாழனன்று நடந்த கூட்டத்தில் குடும்பஸ்ரீ நிர்வாக இயக்குநர் எஸ்.ஹரிகிஷோர் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பித்தார். எஸ்எல்பிசி இறுதி அனுமதி அளித்த உடன் திட்டம் அரசிடம் ஒப்படைக்கப்படும். அதைத் தொடர்ந்து கடன் வழங்குவதற்கான அரசின் உத்தரவு பிறப்பிக்கப்படும்.
கோவிட் உருவாக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முதல்வர் பினராயி விஜயன் ரூ.20,000 கோடிக்கான திட்டத் தொகுப்பை அறிவித்திருந்தார். அதில் குடும்பஸ்ரீ மூலம் ரூ.2,000 கோடிக்கான கடன் வழங்கும் திட்டமும் இடம்பெற்றுள்ளது. பெருவெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பையொட்டி குடும்பஸ்ரீ ஏற்கனவே இதுபோன்ற ஒரு சிறப்புத் திட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி 1,95,000 குடும்பங்களுக்கு ரூ.1680 கோடி கடன் வழங்கப்பட்டது. அதற்கான வட்டியாக ரூ.131 கோடி முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக ரூ.90 கோடி வட்டியாக உடனே வழங்கப்படும்.
கேரளத்தில் 2.9 லட்சம் ‘அயல்கூட்டங்களில்’ (அருகில் உள்ளோர்) 46 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். அயல்கூட்டம் சுய உதவிக்குழு ஒன்றுக்கு ஆறு லட்சம் ரூபாய் வரை கடன் அனுமதிக்கப்படுகிறது. இந்த தொகை அயல்கூட்டம் உறுப்பினர்களுக்கு பகிர்ந்து வழங்கப்படும்.
முதல்வரின் அறிவிப்பு வந்த பிறகு நிதித்துறை செயலாளர், எஸ்எல்பிசி அதிகாரிகளுடன் விவாதித்தார். அதைத் தொடர்ந்து விரிவான திட்டத்தை குடும்பஸ்ரீ, எஸ்எல்பிசியிடம் அளித்தது. எஸ்எல்பிசி அதிகாரிகள் வங்கி அதிகாரிகளுடன் ஆன்லைன் மூலம் விவாதித்து இன்று (வெள்ளி) திட்டத்துக்கான அங்கீகாரம் அளிக்கும்.
கோவிட் பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்தவர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த கடனுதவி பெற தகுதியுடையவர்கள் ஆவர். ஆனால் மூடல் (லாக்டவுண்) அறிவிப்புடன், அனைத்து அயல்கூட்ட உறுப்பினர்களும் தகுதி பெறுவார்கள் என்று ஹரிகிஷோர் கூறினார்.