tamilnadu

img

மாதர் சங்க தலைவரின் கடையை சேதப்படுத்தி இழிவானப் பேச்சு

சின்னமனூர் காவல் ஆய்வாளர் மீது  நடவடிக்கை எடுத்திடுக! 

போலீஸ் எஸ்.பி.யிடம் மாதர் சங்கம் மனு

தேனி,  மே 1- சின்னமனூர் காவல் ஆய்வாளர்  மீது  நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேனி மாவட்டக்குழு சார்பில் மாவட்டச் செயலாளர்   எஸ். வெண்மணி,  தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு  வெள்ளியன்று அனுப்பியுள்ள மனு  விபரம்   வருமாறு:

தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சியில் சாலையோர வியாபாரம் செய்து வரும்  எஸ். ஈஸ்வரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் ஆவார். இவர் சின்னமனூர் நகராட்சி சந்தை அருகில் பழங்கள் மற்றும் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார். கடையிலேயே உணவு சமைத்து சாப்பிட்டு அங்கேயே தங்கி வாழ்ந்து வருகிறார். அவரைப் போல் பல குடும்பங்கள் அப்பகுதியில் உள்ளார்கள். இந்நிலையில் கொரோனாவுக்கு பின் கடையை முழுமையாக திறக்கவில்லை. அதோடு காய்கறி மற்றும் பழங்களை மதியம் 1 மணி வரை கேட்டு வருபவர்களுக்கு சமூக விலகல் இடைவெளியை பின்பற்றி வழங்கி வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி பிற்பகல் 12 மணியளவில் சின்னமனூர் காவல் ஆய்வாளர் கடைக்கு வந்து எஸ். ஈஸ்வரியை காய்கறி, பழங்கள் எதுவும் விற்கக் கூடாது என தகாத வார்த்தைகளால் பேசி, ஜீப்பில் காவல்நிலையம் அழைத்துச் சென்று வழக்கு போடுவதற்கு எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்துள்ளார். அதற்கு பின் சில நாட்கள் எந்த பொருட்களும் விற்கவில்லை. இருந்தாலும் வாழ்க்கையை நடத்த வேறு வழியில்லாமல் காய்கறிகள், தண்ணீர் பழம் மட்டும் வாங்கி கடையைத் திறக்காமல் கேட்டு வரும் நபர்களுக்கு மட்டும் விற்று வந்தார்.

ஏப்ரல் 21 அன்று பிற்பகல் 12  மணிக்கு மீண்டும் கடைக்கு வந்து காவல் ஆய்வாளர்  அத்துமீறி நுழைந்து, உள்ளே இருந்த எஸ். ஈஸ்வரியை ஒருமையில் அழைத்து ஒரு பெண் என்று கூட பாராமல் அநாகரீகமான, அருவருக்கத்தக்க இம்மனுவில் குறிப்பிட முடியாத வார்த்தைகளால் பேசி பழங்களை கீழே தள்ளிவிட்டும், சேர்களை உடைத்தும், கடையைச் சுற்றி கட்டியிருந்த தார்பாய்களை அறுத்துவிட்டு. இழிவாகப் பேசி மிரட்டிச் சென்றுள்ளார்.

மீண்டும் ஏப்ரல் 30 அன்று காலை 10 மணிக்கு சார்பு ஆய்வாளர் மற்றும் இரு காவலர்கள் வந்து எஸ். ஈஸ்வரியிடம் உன் கடையில் புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் விற்பதாக தகவல் வந்துள்ளது. ஆகவே, உன் கடையைச் சோதனை செய்ய வேண்டுமென்றனர். ஈஸ்வரியும் தாராளமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி உள்ளே அழைத்துச் சென்றுள்ளார். சமையல் செய்யும் இடம் உட்பட அனைத்தையும் சோதனை செய்த காவலர்கள் எதுவும் கிடைக்காமல் திரும்பிச் சென்று விட்டனர். அன்று மாலை 7 மணியளவில்  ஈஸ்வரி மருத்துவமனைக்கு சென்ற நேரத்தில், அவருடைய அண்ணன் மகள் கடைக்கு உள்ளே இருந்த போது காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் அங்கே வந்து ஆபாசமான, அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசியுள்ளார். அந்தநேரத்தில் ஈஸ்வரி அங்கு வந்துவிட்டார். அவரிடம், மிக மோசமான வார்த்தைகளை உதிர்த்த காவல் ஆய்வாளர், உன்னை சிறையில் வைக்காமல் விடமாட்டேன் என பகிரங்கமாக மிரட்டிச் சென்றிருக்கிறார்.

தேனி மாவட்டத்தில் பெண்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகளில் தலையிடும் அமைப்பாக உள்ள அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் எஸ். ஈஸ்வரியிடம் கடும் வன்மத்துடன் ஆபாசமாக, அருவருக்கத்தக்க முறையில் நடந்து கொண்ட காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையின் மிரட்டல்களிலிருந்து எஸ். ஈஸ்வரிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.