tamilnadu

img

மதுரையில் தேசிய மருந்து சார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் அமைத்திடுக

வைகோ, சு.வெங்கடேசன் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை

மதுரை, நவ.20-  மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் அமைக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் மத்திய இரசாயனம்- உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவை சந்தித்து மனு அளித்து வலியுறுத்தினர்.  அமைச்சரிடம் வழங்கியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் 1998இல் இயற்றப்பட்ட சட்டத்தின்படி தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாகும்.

மருந்துசார் அறிவியலில் மேம்பட்ட படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிக்காக ஒரு சிறப்பு மையத்தை உருவாக்கும் நோக்கத்துடன் மருந்துசார் அறிவியலில் முதல் தேசிய அளவிலான கழகமாக உருவாக்கப்பட்டது தான் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் ( NIPER) இந்திய அரசு, தேசிய மருந்து சார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகத்தை ஒரு “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக” பிரகடனப்படுத்தியுள்ளது. இது இந்திய அரசின் இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்துசார் துறையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இது இந்திய தொழில்நுட்பக் கழகத்திற்குச் சமமான அந்தஸ்தை கொண்டதாகும். மருந்துசார் அறிவியலில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஒரு உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தர அடையாளமாக உருவாக்கும் ஒரு பார்வையுடனும், மருந்துசார் தொழில் வளர்ச்சிக்காகவும், இந்திய மக்களின் நலனுக்காகவும் ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகத்தை உருவாக்குவது கட்டாயமாகும்.

தற்போது நாடு முழுவதும் 7 தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகங்கள் உள்ளன. முதல் கழகம் 1998இல் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு மற்ற 6 கழகங்கள் 2007 ஆம் ஆண்டிலிருந்து 2008 காலத்தில் அகமதாபாத், கவுகாத்தி, ஹைதராபாத், ஹாஜிபூர் (பீகார்), கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் துவக்கப்பட்டன. 2011 ஜனவரி 20 அன்று நடைபெற்ற எட்டாவது நிதி ஆணையத்தின் கூட்டத்தில் இதர 5 கழகங்களுடன் மதுரையில் ஒரு தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகத்தை உருவாக்கப் பரிந்துரை செய்யப்பட்டது. 2011 செப்டம்பர் 13 இல் நடைபெற்ற மத்திய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கூறிய கழகங்களை அமைப்பதற்கான முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் வழங்கியது.

எட்டாவது நிதி ஆணையம் வழங்கிய செல்லுபடியாகும் நீட்டிப்பை செலவினங்கள் துறை 2016 ஜூன் 13 தேதியிட்ட அலுவலகக் குறிப்பாணையில் ஒப்புதல் அளித்துள்ளது. 2018 மார்ச் 26 அன்று நடைபெற்ற எட்டாவது நிதி ஆணையத்தின் கூட்டத்தில் மதுரை உள்ளிட்ட இடங்களில் புதிய தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகங்கள் அமைப்பது பற்றி மறு ஆய்வு செய்யப்பட்டது. எட்டாவது நிதி ஆணையத்தின் காலமான 2020-25இல் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தை மதுரையில் துவக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது தென்னிந்தியாவில் இதுபோன்ற முதன்மையான ஆராய்ச்சிக்கழகம் இல்லாத நிலையில் மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகத்தை துவக்குவது பொதுவாக இந்தியாவிற்கும், குறிப்பாக தென்னிந்தியாவிற்கும் உதவிடும்.

தமிழக அரசு மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் அமைப்பதற்கென 116 ஏக்கர் நிலத்தை இலவசமாக ஏற்கெனவே ஒதுக்கியுள்ளது. மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் மாணவர் சேர்க்கையினைத் துவக்கும் வகையில், மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம், நிதி ஆயோக் ஆகியவை உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.