1325 - உலக வரலாற்றின் நாடுகாண் பயணிகளிலேயே மிகஅதிகத் தொலைவு பயணித்தவரான இபின் பத்தூதா, தன் சொந்த ஊரான மொராக்கோவின் டேஞ்சியர் நகரிலிருந்து 20 வயதில் முதல் பயணத்தைத் தொடங்கினார். அன்றிலிருந்து 29 ஆண்டுகள் இடைவிடாமல் பயணித்த பத்தூதா, 1354இல் நாடு திரும்பியபோது, சுமார் 1,17,000 கி.மீ. பயணித்திருந்தார். குதிரையின் வேகம்தான் மனிதர்கள் பயணிக்க முடிந்த மிகஅதிக வேகமாக இருந்த அக்காலத்தில், எல்லா நாட்களும் சராசரியாக 11 கி.மீ. தொலைவு பயணித்திருந்தால்தான் அடைந்திருக்கக்கூடிய இவ்வளவு தொலைவு பயணம் என்பது மிகப்பெரிய சாதனையும்கூட. ஆப்ரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்களிலும், இந்தியா உட்பட, அவர் பயணித்த பகுதிகள் இன்று, 44 நாடுகளாக உள்ளன. முகமதியர்களின் புனிதக் கடமையான, ஹஜ் பயணமாக மெக்கா செல்வதுதான் உண்மையில் பத்தூதாவின் நோக்கமாக இருந்தது. அவர் காலத்திய வசதிகளின்மூலம், டேஞ்சியரிலிருந்து மெக்காவுக்குப் பயணக்காலமான 16 மாதங்களில், பயணத்தின்மீது தனக்கிருந்த விருப்பத்தை உணர்ந்த பத்தூதா, அடுத்த 24 ஆண்டுகளுக்கு சொந்த ஊருக்குச் செல்லவேயில்லை!
சென்ற பாதைகளில் மீண்டும் செல்வதைத் தவிர்த்தாலும், இந்தப் பயணங்களில் நான்கு முறை மெக்கா சென்றார் பத்தூதா. நீதிபதிகளின் குடும்பத்தில் பிறந்து, அத்தகைய கல்வியும் பெற்றிருந்ததால், சென்ற இடங்களிலெல்லாம் மதிப்புடன் வரவேற்கப்பட்ட அவர், மக்கள் வழங்கிய உணவு, தங்குமிடம், பரிசுகள் ஆகியவற்றை மட்டும் பயன்படுத்தியே பயணத்தைத் தொடர்ந்தார். சென்ற பல நாடுகளிலும் நீதிபதியாகவும் பணியாற்றியிருக்கிறார். அணிந்திருந்த ஆடையைத்தவிர மற்றவற்றைக் கொள்ளையர்களிடம் பறிகொடுத்தது, பயணித்த கப்பல் மூழ்கியதில் அனைத்தையும் இழந்து உயிர் பிழைத்தது உள்ளிட்ட அனுபவங்களையும் அவர் பெற்றார். பயணத்தின்போது எதையும் எழுதாத பத்தூதா நாடு திரும்பியபின், மொராக்கோவின் சுல்தான் அபு-இனான் ஃபரிஸ் வலியுறுத்தியதால், அனுபவங்களைச் சொல்ல, இபின் ஜுஸாய் என்ற அறிஞர் அவற்றைப் பதிவு செய்தார். சென்ற இடங்களில் பல வரலாற்று நிகழ்வுகளை நேரடியாகக் கண்ட பத்தூதா, அவற்றையும், பல்வேறு நாடுகளைப் பற்றிய தகவல்களையும் ரிஹ்லா(பயணங்கள்) என்ற அந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். கிறித்தவப் பேரரசான பைசாந்தியப் பேரரசின் தலைநகர் கான்ஸ்டாண்டிநோபிள் பற்றிய மிகச்சரியான அவரது பதிவுகள், அவர் நடுநிலையுடன் தகவல்களைக் குறிப்பிட்டிருப்பதை உறுதிப்படுத்துகின்றன.
- அறிவுக்கடல்