tamilnadu

img

மோட்டார் வாகனச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள அனைத்துத்திருத்தங்களும் திரும்பப்பெறப்பட வேண்டும்

புதுதில்லி, ஜூலை 24-

மோட்டார் வாகனத் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள அனைத்துத் திருத்தங்களும் திரும்பப்பெறப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. செவ்வாய் அன்று மாலை மக்களவையில் 2019ஆம் ஆண்டு மோட்டார் வாகன (திருத்தச்) சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டு அதன் மீது விவாதங்கள் நடைபெற்றன. அதில் பங்கேற்று பி.ஆர். நடராஜன் பேசியதாவது:

மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதற்காக இச்சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதில் உள்ள ஐந்து திருத்தங்களும் நேரடியாகவே மாநில அரசுகளின் அதிகாரங்களை ஆக்கிரமிப்பவைகளாகும். மாநில அரசுகளின் வருவாய், மாநில அரசுகளின் கீழ் இயங்கும் போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் போக்குவரத்துத்துறை ஆகியவற்றில் மிகவும் மோசமான அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவைகளாகும்.

மேலும், இது போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மீதும் மற்றும் இதர அரசுத்துறைகளில் வேலை பார்ப்பவர்களின் பாதுகாப்பின்மீதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.  இதுமட்டுமல்லாமல் இந்தத் திருத்தங்கள், கிராமப்புற மக்களுக்கும் மலைப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கும் போக்குவரத்து வசதிகளைத் தருவதிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இவற்றையெல்லாம் தற்போது அரசுப் போக்குவரத்துக் கழகங்கள்தான் எவ்வித லாப நோக்கமுமின்றி அளித்துக் கொண்டிருக்கின்றன.

211-ஏ என்று ஒரு புதிய பிரிவு சேர்க்கப்படிருக்கிறது. இது, மோட்டார் வாகனங்கள் மீது மத்திய அரசு அமைத்திடும்  ஓர்  அமைப்பு, கட்டணங்கள் விதித்திடவும், வரிகள் விதித்திடவும் வகை செய்கிறது. இது, மாநில அரசாங்கங்கள் மட்டும் இதுவரை மேற்கொண்டுவந்த அதிகாரங்களை ஆக்கிரமிப்பது மட்டுமல்ல, மாநில அரசுகளின் வருவாயையும் பாதித்திடும். இவ்வாறு கட்டணங்கள் வசூலிப்பதற்கும், வரிகள் வசூலிப்பதற்கும் ஓர் அமைப்பிடம் பொறுப்பை ஒப்படைப்ப தற்கான காரணங்களும் விளக்கப்படவில்லை.

முன்மொழிந்திருக்கின்ற திருத்தங்களுக்கான நோக்கம், “பொது மக்களுக்கான வசதிக்காக” என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இதனை, பிரதான சட்டமான,  1988ஆம் ஆண்டு  மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் மாநில அரசின்கீழ் இயங்கும் போக்குவரத்துத் துறையின்கீழான அதிகாரிகளால் மட்டும்தான் வலுவானமுறையில் முன்னெடுத்துச் செல்ல முடியும். எனவே, இவ்வாறு புதிதாக 211-ஏ என்று ஒரு புதிய பிரிவு சேர்க்கப்பட்டிருப்பது நீக்கப்பட வேண்டும்.

அடுத்து, 91ஆவது கூறு (clause 91), ஒரு திருத்தம் முன்மொழிந்திருக்கிறது. இதுவும் மாநில அரசுகளின் கீழ் இயங்கிடும் போக்குவரத்துக் கழகங்களின் உரிமைகள் மீது ஆக்கிரமிப்பை மேற்கொள்கிறது. இந்தப் பிரிவின்கீழ், மத்திய அரசாங்கம், இந்தச்சட்டத்தின்கீழ் இயங்குவதற்கு பொது ஊழியர் அல்லது தனிநபர் எவருக்கும் அதிகாரம் அளிக்கிறது. இவ்வாறு தனியாரிடம் அளவுக்கு மீறிய விதத்தில் அதிகாரங்களை அளிப்பது, இந்திய அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்ல, தனியார் அரசாங்கத்தின் அமைப்புகளுக்குள் மூக்கை நீட்டுவதற்கு வசதிசெய்து தருவது போன்றதுமாகும். இது எந்த  அரசாங்கத்தின் கொள்கையுடனும் ஒத்துப்போகாது.    இவ்வாறு தனியார் அரசாங்கத்தின் அமைப்புகளுக்குள் நுழைவதைத் தவிர்த்திடுவது அவசியம். இதற்காக, 215-ஏ, பி மற்றும் சி பிரிவுகளை நீக்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

29ஆவது கூறு, ஒரு புதிய ஷரத்தை, 66-ஏ பிரிவு என்னும் ஒரு புதிய பிரிவை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன்படி, மாநிலங்களுக்கு இடையே தடை அரண்கள் எதுவுமின்றி மிகவும் எளிதாக இயங்குவதற்கு வசதி செய்துதரும் விதத்தில் ஓர் ஒருங்கிணைந்த தேசியப் போக்குவரத்துக் கொள்கை ஒன்றை மத்திய அரசு உருவாக்கிடும். இது, நகர டாக்சி அனுமதி அளிக்கும் முறைகள் உட்பட அனைத்துப பொதுப் போக்குவரத்துகளுக்கான விதிமுறைகளையும் தளர்த்திடுகிறது.

மற்றுமொரு புதிய ஷரத்து, 88-ஏ என்னும் பிரிவும் இச்சட்டமுன்வடிவின் 33ஆவது கூறின்கீழ் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. இது, மாநிலங்களுக்கிடையே பொருள்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்திற்கான திட்டங்களை உருவாக்க மத்திய அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. மேலும், இப்போது மாநிலங்களுக்கிடையே ஓடும் போக்குவரத்து சம்பந்தமாக இருந்துவரும் பர்மிட் முறையை தளர்த்திடவும் வகை செய்கிறது.

இவ்வாறு 29 மற்றும் 33  ஆகிய கூறுகளின்கீழ்  முன்மொழிந்திருக்கிற திருத்தங்கங்களின்படி, இப்பிரிவுகளின் மீதான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மட்டுமே பயன்படுத்திட முடியும். இதுவும் மாநிலப் போக்குவரத்துக் கழகங்களின் நலன்களைப் பாதித்திடும்.

மாநிலங்களுக்கிடையிலான ஒப்பந்தங்கள் சம்பந்தமாக, இந்தச் சட்டமுன்வடிவின் பின்னே இருக்கின்ற கொள்கை, 1950ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து கார்ப்பரேஷன் சட்டத்தின் 20ஆவது பிரிவிற்கு மிகவும் பிற்போக்குத்தனமான நடவடிக்கையாக இருந்திடும். இதன்மூலம், பொதுப்  போக்குவரத்து சேவைகளை இயக்குவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும், பர்மிட்டுகள், வரிகள் மற்றும் கட்டணங்கள் விதிப்பதற்கு, தற்போது மாநில அரசுகளிடமிருக்கின்ற அதிகாரங்களை, மத்திய அரசாங்கம் எடுத்துக் கொள்கிறது.   தமிழ்நாட்டில் கிராமங்கள், நகரங்கள், மலைப்பிரதேசங்கள், நெடுந்தொலைவு மற்றும் ஒடுக்கமாக உள்ள பகுதிகளுக்கும் தற்போது இயங்கிவரும் மாநிலப் போக்குவரத்துக் கழகங்களின் போக்குவரத்து சேவைகளில் இது நேரடியாகப் பாதிப்புகளை ஏற்படுத்திடும்.  இந்த சட்டத்திருத்தங்களால் மாநில அரசின் தேசியமயக் கொள்கையே ஒழித்துக்கட்டப்படும்.

அதேபோன்று 18ஆவது கூறு அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதன் மூலம், பதிவுக்கட்டணங்கள் மூலமாக வசூலிக்கப்படும் வருவாய்த் தொகைகள் அவற்றைச் செய்திடும் டீலர்களால் இனிமேல் எடுத்துக்கொள்ளப்படும். இந்த டீலர்கள் பதிவு செய்யப்படும் வாகனங்களை அநேகமாக நேரடியாக ஆய்வு செய்திடாமலேயே பதிவெண்களை வழங்கிவிடுவார்கள். இது, சாலைப் பாதுகாப்பு அம்சங்களில் சமரசம் செய்துகொள்ளப்படுவதுடன், மாநில அரசுகளுக்கு வரவேண்டிய வருவாயில் மிகப்பெரிய அளவில் இழப்பினையும் ஏற்படுத்திடும்.

எனவே, இந்தச் சட்டமுன்வடிவின்மூலம் கொண்டு வரப்படுகின்ற அனைத்துத் திருத்தங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு பி.ஆர். நடராஜன் பேசினார்.

(ந.நி.)