tamilnadu

img

பசி கோவிந்தம் படைத்த எழுத்தாளர் விந்தன் - எஸ்.ஏ.பெருமாள்

கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 12

விந்தன் கடந்த நூற்றாண்டில் சமூக அவலங்களைச் சாடியும், ஏழை, எளிய வறுமையின் கோரப் பிடியில் சிக்கியுள்ள அனாதைகளைப் பற்றியும் எழுதிக் குவித்தவர். விந்தன் எழுத்துக்களைப் பார்த்து ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களே வியந்து போற்றினார்கள். பின்பற்றினார்கள் என்றால் அது மிகையாகாது. மனித வாழ்வின் துயரங்களுக்கு அவர் வடிவம் தந்து வாசகரின் நெஞ்சை உலுக்கினார். அமரர் கல்கியால் ஊக்குவிக்கப்பட்டு வளர்ந்தார். பலரது எதிர்ப்புகள் வந்தபோதும் கல்கி ஆதரவளித்தார். 22-9-1916ல் செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் கோவிந்தன் பிறந்தார். சென்னைக்கு குடி வந்து சூளைப் பகுதியில் வாழ்ந்தனர். ஆரம்பக் கல்விக்குப்பின் குடும்ப வறுமையால் தந்தையுடன் சிறுவனாய் கருமான் வேலைக்குப் போனார். இரவுப் பள்ளியில் கொஞ்ச காலம் படித்தார். பின்பு அச்சுக் கோர்க்கும் தொழில் படித்து தமிழரசு அச்சகத்தில் வேலை செய்தார். பின்பு ஆனந்த போதினி, தாருல் இஸ்லாம் பத்திரிகைகளில் வேலை செய்து விட்டு ஆனந்த விகடனில் சேர்ந்தார். பின்பு 1941ல் கல்கி வார இதழில் அச்சுக் கோர்க்கும் வேலையில் சேர்ந்தார்.

விந்தன் கதை எழுதும் திறன் கொண்டவர் என்பதை அறிந்த கல்கி ஒரு கதை எழுதி வரச் சொன்னார். இவர் கதை எழுதிக் கொண்டு போனதும் அதைப் படித்து விட்டு உடனே பிரசுரம் செய்தார். இவருக்கு விந்தன் என்று பெயர் சூட்டி கல்கி பத்திரிகையின் துணை ஆசிரியர் பொறுப்புக்கு உயர்த்தினார். 1946ல் “முல்லை கொடியாள்” என்ற தலைப்பில் சிறுகதைத் தொகுப்பு வந்தது.  தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் இந்த தொகுப்புக்கு முதல் பரிசு வழங்கியது. 1947 இல் ‘கண்திறக்குமா?’ என்ற கதையை நக்கீரன் எனும் பெயரில் எழுதினார். கல்கியில் அவர் எழுதிய ”பாலும் பாவையும்” தொடர் நாவல் புகழ் பெற்றதாகும். ஒரு காலத்தில் பிராமண எழுத்தாளர்களால் பிராமணச் சூழல்களில் மட்டுமே வந்து கொண்டிருந்த சிறுகதைகளுக்கு மாற்று வடிவம் கொடுத்து உழைப்பாளி வர்க்கத்தின் கதைகளை ஏற்றுவித்தார்.

விந்தன் கொஞ்ச காலம் சினிமா உலகில் பிரவேசித்து படம் ஒன்றை ஆரம்பித்து நஷ்டமானார். “மனிதன்” என்ற பத்திரிகையை ஆரம்பித்து நஷ்டமடைந்தார். பின்பு தினமணி கதிர் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். பின்பு ஏராளமாக எழுதினார். மீண்டும் திரையுலகில் நுழைந்து “வாழப் பிறந்தவள் - அன்பு- கூண்டுக்கிளி- மணமாலை- பார்த்திபன் கனவு - போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார். குலேபகாவலி படத்தில் இவர் எழுதிய “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ- இனிக்கும் இன்ப இரவே நீ வா வா” என்ற பாடல் புகழ்பெற்றது. ராஜாஜி “பஜ கோவிந்தம்” என்ற நூலை வெளியிட்டார். அதற்கு பதிலளித்து விந்தன் “பசி கோவிந்தம்” என்ற நூலை எழுதினார். எம்.கே.தியாகராஜ பாகவதர் கதை, எம்.ஆர்.ராதாவின், சிறை அனுபவம் என்று அவர்களுடன் கலந்து பேசி நூல்களாய் கொண்டு வந்தார். தீண்டாமைக் கொடுமைகளைச் சாடி சிறுகதைகள் எழுதியுள்ளார்.  ஒரே உரிமை, ஓ மனிதா, மனிதன் மாறவில்லை, விந்தன் குட்டிக் கதைகள், வேலைநிறுத்தம் ஏன்? போன்றவை அவரது படைப்புகளில் சில. இடதுசாரிக் கண்ணோட்டத்துடன் கதைகள், நாவல்களைப் படைத்த விந்தன் 30-6-1975ல் காலமானார். பலதுறையினரும் சேர்ந்து அவருக்கு மணிவிழா ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது மரணம் நேரிட்டது.  அவரது மறைவுக்குப் பின் அவருடைய நூல் தமிழக அரசால் 2008- 09 இல் நாட்டுடைமையாக்கப்பட்டன.