புதுதில்லி:
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி செப்டம்பர் 23 ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார். கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனாவால் 54 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6 கோடியே 36 லட்சத்து 61 ஆயிரத்து 060 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு போதிய நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை என்ற கொந்தளிப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று அதிகமாக உள்ள தமிழகம் உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடிசெப்டம்பர் 23 ஆம் தேதி தில்லி பிரதமர் அலுவலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பங்கேற்று தமிழக கொரோனா நிலவரம் குறித்தும் தேவையான நிதிகள் வழங்கக் கோரி பிரதமர் மோடியிடம் வலியுறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.