tamilnadu

ஆகஸ்டில் வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்து?

புதுதில்லி, மே 24- இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து திங்கட்கிழமை முதல் தொடங்க இருப்பதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கடந்த புதன்கிழமை தெரிவித்தார். இந்த சூழ்நிலையில், ‘பேஸ்புக்’ மூலம் சனியன்று கலந்துரையாடிய ஹர்தீப் சிங் பூரியிடம், சர்வதேச விமான போக்குவரத்து எப்போது தொடங்கும்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்துக்குள் வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்து தொடங்கும் என்று தான் முழு நம்பிக்கையுடன் இருப்பதாகவும், முழு அளவில் இயக்க முடியாவிட்டாலும் கணிசமான விமானங்களை வெளிநாடுகளுக்கு இயக்க முயற்சி செய்வோம். ஆனால் எந்த தேதியில் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கும் என கூற இயலாது என்று தெரிவித்தார். ஆகஸ்ட் அல்லது செப்டம்பருக்குள் தொடங்க முடியுமா? என சிலர் கேட்கலாம். சூழ்நிலை சாதகமாக அமைந்தால் அதற்கு முன்பே கூட தொடங்க முடியும் என்பதுதான் தனது பதில் என்றும் ஹர்தீப் சிங் பூரி கூறினார்.