tamilnadu

img

புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு 2019 பின்னணி?- 14ம் பாகம்

கல்வியின் மீது ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் ஆதிக்கம்

அகில பாரதிய வித்யார்த்தி பரிசத், வித்யா பாரதி, பாரதிய சிக்‌ஷன் மண்டல், சிக்‌ஷா பச்சாவோ அந்தோலன், சிக்‌ஷா சன்ஸ்கிருதி உத்தன் நியாஸ், அகில பாரதிய இதிகாஸ் சங்களன் யோஜனா, விஞ்ஞான் பாரதி, அகில பாரதிய ராஷ்ட்ரிய ஷைக்‌ஷிக் மகாசங், சம்ஸ்கிருத பாரதி, அகில பாரதிய சாகித்ய பரிசத், சன்ஸ்கார் பாரதி என்று பதினோரு அமைப்புகள் கல்வி தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் உத்தரவுகளுக்கேற்றவாறு செயல்பட்டு வருகின்றன. கல்வி தொடர்பாக பாஜக அரசாங்கத்தின் மீது தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுத்து வரும் சில அமைப்புகளின் சிறிய அறிமுகம் இதோ . . .

01.  அகில பாரதிய வித்யார்த்தி பரிசத்

image.png

1949ஆம் ஆண்டு துவங்கப் பெற்றது. சென்னையைச் சேர்ந்த டாக்டர்.சுப்பையா என்பவரை அகில இந்தியத் தலைவராகக் கொண்டு இந்த அமைப்பு இயங்கி வருகின்றது, மும்பையைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரான சுனில் அம்பேகர் தேசிய அமைப்புச் செயலாளராக இருந்து வருகிறார். மாணவர்களுக்கான அமைப்புகளில் முன்னணியில் இருக்கின்ற அமைப்பாக தற்போது வளர்ந்து நிற்கிறது. பல்கலைக்கழகங்களுக்கு அதிக நிதி ஒதுக்குதல், இந்திய கல்வி வளர்ச்சி வங்கி உருவாக்குதல், கல்லூரிகளில் மாணவர் அமைப்புகளுக்கான தேர்தல் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி வருகின்ற இந்த மாணவர் அமைப்பு, ஆர்எஸ்எஸ் உயர்கல்வி குறித்து இதுவரை மிகுந்த அக்கறை காட்டாததால், உயர்கல்வி வளாகங்களுக்குள் நுழைவதில் தனித்த பலவீனங்களைக் கொண்டதாகவே செயல்பட்டு வருகின்றது.  பத்துக்கு மேற்பட்ட ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்கள் இந்த அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

02.  வித்யா பாரதி

image.png

வித்யா பாரதி அகில பாரதிய சிக்‌ஷா சன்ஸ்தான் என்ற அமைப்பு 1952ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூரில் ’சரஸ்வதி குழந்தைகள் ஆலயம்’ என்ற பெயரில் தன்னுடைய முதல் பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தது. லக்னோவில் தலைமையகம், டெல்லியில் செயல் அலுவகம் ஆகியவற்றைக் கொண்டு 1977 முதல் பதிவு பெற்ற அமைப்பாகச் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு ஹிந்த்துவா கொள்கைகளுடன் தங்களை முழுமையாக இணைத்துக் கொள்கின்ற, தேசபக்தி கொண்டதொரு தலைமுறையை உருவாக்கும் நோக்கத்துடனான தேசிய கல்வி அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக தன்னை அறிவித்துக் கொள்கிறது.  இன்றைக்கு இந்தியா முழுவதிலும் 4373 ஆரம்ப பள்ளிகள், 5168 இடைநிலைப் பள்ளிகள், 2381 உயர்நிலைப் பள்ளிகள், 1145 மேனிலைப் பள்ளிகளில் 35 லட்சம் மாணவர்கள், ஒன்றரை லட்சம் ஆசிரியர்களுடன் தன்னுடைய கிளைகளை விரித்திருக்கிறது. இந்த அமைப்பு தமிழ்நாட்டில் நடத்துகின்ற 277 பள்ளிகளில் ஏறத்தாழ 65000 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 70க்கும் மேற்பட்ட கல்லூரிகளை நடத்துவதாக கூறும் இந்த அமைப்பு அது குறித்த விவரங்களைத் தராமல் மறைக்கிறது. ‘கல்வியை இந்தியப்படுத்துவது, தேசியப்படுத்துவது, ஆன்மீகப்படுத்துவது” என்ற நோக்கத்துடன் தங்களுடைய அமைப்பு செயல்பட்டு வருவதாக வித்யா பாரதி அமைப்பின் செயலாளர் கூறுகிறார்.  நாடு முழுவதும் கிளை விரித்திருக்கும் இந்த அமைப்பை ஏறத்தாழ 50 ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்கள் இயக்கி வருகின்றனர்.

இந்த அமைப்பின் தலைமை ஆய்வு நிறுவனமாக பாரதிய சிக்‌ஷா ஷோத் சன்ஸ்தன் என்கிற ஆய்வு நிறுவனம், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவராக இருந்த தேவ்ரஸின் இளைய சகோதரரான ஸ்ரீ பாவ்ராவ் தேவரஸ் ஏற்பாட்டில், 1980ஆம் ஆண்டு லக்னோவில் துவங்கப்பட்டது. இந்த ஆய்வு நிறுவனத்தின் நான்காவது தலைவராக நியமிக்கப்பட்ட உத்தரப்பிரதேச முன்னாள் கல்வி அதிகாரியான ஸ்ரீ கிருஷ்ண மோகன் திரிபாதி தேசிய கல்விக் கொள்கை வரைவு தயாரிப்பு குழுவில் உறுப்பினராக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.  

03.  பாரதிய சிக்‌ஷன் மண்டல்

image.png

ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்த பால சாஹேப் தேவ்ரஸ் உடன் 25 கல்வியாளர்கள் 1969ஆம் ஆண்டு ராமநவமி தினத்தன்று மும்பையில் கலந்து கொண்ட கூட்டத்தில், பாரதிய சிக்‌ஷன் மண்டல் என்ற இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இன்று 22 மாநிலங்களில் உள்ள 220 மாவட்டங்களில் கிளைகளைக் கொண்டிருக்கின்றது. குரு-சிஷ்யன் முறையிலான கல்வித் திட்டத்தை முன்வைக்கின்ற இந்த அமைப்பு தன்னுடைய பெரும்பாலான செயல்பாடுகளை பல்கலைக்கழக ஆசிரியர்களில் மத்தியில் கொண்டே இயங்கி வருகிறது.

1974ஆம் ஆண்டு நன்னெறிக் கல்வி தொடர்பாக புனேவில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடத்தப்பட்டது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கொண்டு வந்த 10+2+3 கல்வித் திட்டம் குறித்து டெல்லியில் தேசிய கருத்தரங்கம் நடத்தப்பட்டது. மண்டலின் பரிந்துரைகள் பலவும் அப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டன.

கல்வியில் மாபெரும் மாற்றத்தை உருவாக்குகின்ற வகையில் புதிய தேசிய கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்ற மிகப் பெரிய திட்டத்தை பாரதிய சிக்‌ஷா மண்டல் தொடங்கியது. 1977ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற மூன்று நாள் அனைத்திந்திய கூட்டத்தில் இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. தேவ்ரஸ், ராஜு பைய்யா ஆகியோர் இந்த கூட்டத்தின் போது உடனிருந்து வழிகாட்டினர். அந்த கூட்டத்தில் வடிவமைக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வினாக்கள் அடங்கிய படிவம் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பல மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த படிவம் ஏறத்தாழ 3000 பேர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பதில் பெறப்பட்டது. இந்த பதில்களின் அடிப்படையில் டெல்லியில் கல்வி அமைச்சர் ஜட்டியின் தலைமையில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு கல்விக் கொள்கை இறுதி வடிவத்திற்கு வந்தது.

1980ஆம் ஆண்டு புனே நகரில் ’கல்வியில் இந்தியத் தன்மை’ என்ற தலைப்பில் முதலாவது அபியாஸ வர்கா நடத்தப்பட்டது.  ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 12 மாநிலங்களிலிருந்து 150 பேர் கலந்து கொண்டனர். கேள்விப் படிவம் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள், கல்வியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 100 மாவட்டங்களில் ஏறத்தாழ 200 கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன. 1983ஆம் ஆண்டு வடகிழக்கு மாநிலங்களுக்கான கருத்தரங்கம் குவாலியரிலும், தென் மாநிலங்களுக்கான கருத்தரங்கம் ஹைதராபாத்திலும் நடைபெற்றன. மத்திய அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கருத்துரை வழங்கினர்.

1986 புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பல மட்டங்களில் நடைபெற்ற விவாதங்களில் பாரதிய சிக்ஷன் மண்டல் தீவிரமாகப் பங்கெடுத்தது. மத்திய அரசாங்கத்தால் பெறப்பட்ட 12000 பரிந்துரைகளில் பாரதிய சிக்‌ஷன் மண்டல் மூலமாக மட்டுமே 3000 பரிந்துரைகள் அளிக்கப்பட்டிருந்தன. ஆரம்பத்தில் சுவாமி சின்மயானந்தா போன்றவர்கள் புரவலலர்களாக நியமிக்கப்பட்டனர். பின்னர் T.N.சேஷன் போன்றவர்கள் தேவையான ஆலோசனைகளை மண்டலுக்கு வழங்கி வந்தனர்.

இரண்டாவது அகில இந்திய அபியாஸ வர்கா 1985ஆம் ஆண்டு பெங்களூருவில் நடத்தப்பட்டது. 15 மாநிலங்களில் இருந்து 200 பேர் கலந்து கொண்டனர். கல்வி குறித்த தேசிய வடிவம், வேதங்கள் மற்றும் உபநிஷத்துக்களில் உள்ள அறிவு, சிறுபான்மை நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்ற பாதுகாப்பு ஏற்படுத்தக் கூடிய தீமைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடத்தப்பட்டன.

பொதுமக்களிடம் போய்ச் சேரும் வகையில் ஆறு அம்சத் திட்டம் ஒன்றை 1987ஆம் ஆண்டு மண்டல் முன்வைத்தது. 1989 மார்ச் 28 அன்று 2000 இடங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த ஆறு அம்சங்களையும் வலியுறுத்தி பிரதமர், கல்வி அமைச்சர் மாநில முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா மாநில கல்வி அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டதாக பதில் கடிதம் அனுப்பினர். 

இவ்வாறு சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்த நாளையொட்டி 2013 நவம்பர் 16-17 ஆகிய தினங்களில் டெல்லியில் 89 பல்கலைக்கழகங்களைச் சார்ந்த பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், துறைத் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் வரைக்கும் தன்னுடைய பணிகளை, சாதனைகளை பாரதிய சிக்‌ஷன் மண்டல் தன்னுடைய இணையதளத்தில் பட்டியலிட்டுக் கொண்டே செல்கிறது.

04.  சிக்‌ஷா பச்சாவோ அந்தோலன்

வித்யா பாரதியில் வேலை செய்து வந்த, 1946ஆம் ஆண்டிலேயே குருஷேத்ராவில் ஆர்எஸ்எஸ்சால் நடத்தப்படுகின்ற கீதா வித்யாலயா என்ற பள்ளியை ஆரம்பித்து வைத்து நடத்திய பெருமை கொண்ட தினாநாத் பத்ரா என்பவரால் 2004 ஜூலை 2 அன்று சிக்‌ஷா பச்சாவோ அந்தோலன் என்ற இந்த அமைப்பு துவங்கப்பட்டது. வெண்டி டொனிகர் எழுதிய “ஹிந்துக்கள்: மாற்று வரலாறு” என்ற புத்தகத்தை சந்தையில் இருந்து வெளியேற்றியதில் அவர் ஆற்றிய பங்கு பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் அவருக்கென்று ஓரிடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.. தேசத்திற்கெதிரான கருத்துக்கள், ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்துகின்ற செய்திகள் என்று கருதுகின்றவற்றை பள்ளிப் பாடப்புத்தகங்களில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கி பல திருத்தங்களை சிக்‌ஷா பச்சாவோ அந்தோலன் எனும் இந்த அமைப்பு வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கின்றது. ஹிந்து ஆன்மீகக் கதைகளை இலக்கியம் என்ற அளவிற்கு முன்னிறுத்தாமல், அவற்றை வரலாற்றுப் பாடங்களாக மாற்றியமைக்கும் வேலைகளில் இந்த அமைப்பு தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.

05. சிக்‌ஷா சன்ஸ்கிருதி உத்தன் நியாஸ்

image.png

2007 மே 18 அன்று துவங்கப்பட்ட இந்த அமைப்பிற்கும் தினாநாத் பத்ராதான் தலைவராக இருக்கிறார்.   ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் அதுல் கோத்தாரி செயலராக இருக்கிறார். இந்திய விழுமியங்கள் கற்றுத் தரப்பட வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைப்பதோடு, தங்களுடைய குழந்தைகளை பெற்றோர்கள் தாய்மொழி வழியாக கற்றுத் தருகின்ற பள்ளிகளுக்கு மட்டுமே அனுப்ப வேண்டும் என்ற பிரச்சாரத்தையும் இந்த அமைப்பு முன்னெடுத்துச் செல்கிறது. கல்வியில் அறிவியல், ஆன்மீகம், இந்திய விழுமியங்கள் ஆகியவற்றிற்கிடையே சமத்துவம் இருக்க வேண்டும் என்கிறார் செயலாளர் கோத்தாரி. பத்ரா, கோத்தாரி ஆகியோருடன் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநராக இருந்த பேராசிரியர் J.S.ராஜ்புத் இந்த அமைப்பில் மிக முக்கிய உறுப்பினராக இருந்து செயல்பட்டு வருகிறார். புதிய தேசிய கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்காக 2015ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சுப்பிரமணியன் குழுவில் உறுப்பினராக இருந்ததோடு, அதே நோக்கத்துடன் 2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் குழுவிடம் தனது ஆலோசனைகளை வழங்கியவர் ராஜ்புத் என்பது குறிப்பிடத்தக்கது.

06.  அகில பாரதிய இதிகாஸ் சங்களன் யோஜனா

image.png

இந்திய வரலாறு குறித்து ஏராளமான ஆய்வுகளைச் செய்தவர் என்பதாகச் சொல்லப்படுகின்ற உமாகாந்த் கேசவ் ஆப்தே என்பவரின் பெயரால், அவரது மறைவிற்குப் பிறகு 1973ஆம் ஆண்டு ஆப்தே சமரக் சமிதி என்று நாக்பூரில் துவங்கப்பட்ட அமைப்பே, 1993ஆம் ஆண்டு அகில பாரதிய இதிகாஸ் சங்களன் யோஜனா என்பதாகப் பெயர் மாற்றம் பெற்றது. புராணங்கள், உபநிஷத்துகளின் அடிப்படையில் இந்திய வரலாற்றை மாற்றி எழுதுவதை தன்னுடைய நோக்கமாக கொண்டு இந்த அமைப்பு இயங்கி வருகிறது, ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரான பால்முகுந்த் பாண்டே அமைப்புச் செயலாளராக பணியாற்றி வருகிறார். அனைத்து மொழிகளுக்கும் தாயான, மிகவும் பழமையான  சமஸ்கிருதத்தை பரப்புவது, இந்திய வரலாற்றை மீளுருவாக்கம் செய்வதற்கான தகவல்களைச் சேகரிப்பது என்று இரு முக்கிய பணிகளைத் தன்னுடைய நோக்கமாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

 

07.  விஞ்ஞான் பாரதி

image.png

ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட பெங்களூவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் அறிவியலாளர்களால் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, பின்னர் 1991 அக்டோபர் 21 அன்று நாக்பூரில் விஞ்ஞான் பாரதி அல்லது விபா என்ற அமைப்பாக முறைப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பெயர்களில் பதிவு செய்யப்பட்டு 27 தனிப்பட்ட அமைப்புகளாக இயங்கி வருகிறது. ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்களான ஜெயந்த் சகஸ்ரபுத்தே, ஜெயகுமார் ஆகியோர் இந்த அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். 5000 உறுப்பினர்களைக் கொண்ட விபாவில் 3000க்கும் மேற்பட்டோர் அறிவியலாளர்களாகவும், மற்றவர்கள் அறிவியல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் என்று இந்த அமைப்பினர் சொல்கின்றனர். இந்த அறிவியல் தொழில்நுட்பக் காலத்தில் தேசத்தை மறுகட்டமைப்பு செய்வதற்கு சுதேசி இயக்கத்திற்கு உயிருட்டுவதே தங்களது நோக்கம் என்பதாக அறிவித்து இவர்கள் செயல்பட்டு வருகின்றனர். 2015ஆம் ஆண்டு கேரளாவில் மலப்புரத்தில் சுதேசி அறிவியல் காங்கிரஸை நடத்தினர். வாசு, மாதவன் நாயர், அனில் ககோத்கர், V.N.ராஜசேகரன் பிள்ளை ஆகியோர் புரவலர்களாக இருக்கின்ற இந்த அமைப்பின் ஆலோசகர்களில் ஒருவராக தற்போது நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினராக உள்ள V.K.சரஸ்வத் செயல்பட்டு வருகிறார்.

 

08.  அகில பாரதிய ராஷ்ட்ரிய ஷைக்‌ஷிக் மகாசங்

image.png

 

ஆர்எஸ்எஸ் பிரசாரகரான மகேந்திர கபூர் தலைமையில் இயங்கி வருகின்ற இந்த அகில பாரதிய ராஷ்ட்ரிய ஷைக்‌ஷிக் மகாசங் அமைப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டுமல்லாது 130 பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்து வருகின்ற எட்டு லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். நமது சிந்தனைகள், எண்ணங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கின்ற மேற்குலகிலிருந்து தங்களுடைய நடவடிக்கைகளைப் பிற சங்கங்கள் திட்டமிட்டுக் கொள்வதாக குறிப்பிடும் இந்த அமைப்பு, இதைச் செய்யலாம், இதைச் செய்யக் கூடாது என்று எந்தவொரு அரசியல் கட்சியும் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்று கூறிக் கொள்கிறது. அரசியல் கட்சிகளின் கட்டுப்பாடு ஒருபோதும் தங்கள் மீது இருந்ததில்லை என்றாலும், தேவைப்படுகின்ற சமயங்களில் எங்களுடைய ஆதிக்கம் அவர்களின் மீது இருந்துள்ளது என்றும் பெருமைப்பட்டுக் கொள்கிறது. ஸ்மிருதி இரானி அமைச்சராக இருந்த போது, ஆரம்ப, இடைநிலை மற்று உயர்கல்வி தொடர்பாக 17 கோரிக்கைகளை இந்த அமைப்பு அவரிடம் நேரடியாக முன்வைத்தது. 2014 செப்டம்பரில் கல்வி நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்துகின்ற அமைப்புகளை உருவாக்குவது குறித்து ஜெய்ப்பூரில் ஆர்எஸ்எஸ் பின்னணியில் நடைபெற்ற மாநாட்டை இந்த அமைப்பே முன்னின்று நடத்தியது.

09. சம்ஸ்கிருத பாரதி

image.png

மறைந்த ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் அஜித் என்பவரால் 1981ஆம் ஆண்டு பெங்களூருவில் ”சமஸ்கிருதம் பேசுவோம்” என்ற இயக்கமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட அமைப்பு,  சமஸ்கிருத பாரதி என்ற அமைப்பாக 1995ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது தினேஷ் காமத், ஸ்ரீஷ்  தேவ்பூஜாரி ஆகிய  இரண்டு ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 

 

10. அகில பாரதிய சாகித்ய பரிசத்

image.png

இந்திய இலக்கியங்கள்,  இந்திய மொழிகளை உயர்த்துகின்ற வகையில் செயல்படுகின்ற அமைப்பாக 1966 அக்டோபர் 27 அன்று டெல்லியில் அகில பாரத சாகித்ய பரிசத் அமைப்பு நிறுவப்பட்டது.  அதே ஆண்டில், அதன் தேசிய மாநாடு இலக்கிய எழுத்தாளர் ஜெயேந்திர குமாரின் தலைமையில் நடைபெற்றது. தற்போது அதன் தலைவராக திரிபுவன் நாத் சுக்லா இருக்கிறார். ஆர்எஸ்எஸ் பிரச்சரகர் ஸ்ரீதர் பரத்கர். அமைப்பின் பணிகளைப் பார்த்துக் கொள்கிறார். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் இந்த அமைப்பு செயல்பட்டுக் கொண்டு வருகிறது.

 

11. சன்ஸ்கார் பாரதி

image.png

1981ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சன்ஸ்கார் பாரதி எனும் அமைப்பு கலை மற்றும் கலாச்சாரம் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. நாடு முழுவதும் இந்த அமைப்பிற்கென்று 2000 கிளைகள் இருப்பதாக இந்த அமைப்பின் இணையதளம் தகவலைத் தருகிறது. மக்களை மகிழ்விப்பதற்காக மலிந்த, ஆபாசமான நிகழ்ச்சிகளைத் தருவதில்லை, நுண்கலைகளை உருவாக்கித் தருவது, கலையை நாட்டிற்கான சேவையெனக் கருதுவது, கலைகளின் மூலம் நாட்டு மக்களிடம் கடவுள் மீதான பற்றுதல், தேசப்பற்றை உருவாக்கித் தருவது போன்ற நோக்கங்களுடன் இந்த அமைப்பு செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கிறது. முக்கியமான பொறுப்புகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாருமில்லை என்றாலும், இணை அமைப்புச் செயலாளராக ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் அமீர் சந்த் செயல்பட்டு வருகிறார். 

இந்த அமைப்புகளில் ஏபிவிபி, பாரதிய சிக்‌ஷா மண்டல், சிக்‌ஷா சன்ஸ்கிருதி உத்தன் நியாஸ் போன்ற அமைப்புகள் மிகத் தீவிரமாக ஈடுபட்டு சுப்பிரமணியன் குழு அறிக்கையை நிறுத்தி வைத்தது மட்டுமல்லாது, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திலிருந்து ஸ்மிருதி இரானியை நீக்கி விட்டு அந்த இடத்திற்கு பிரகாஷ் ஜவடேகரைக் கொண்டு வந்து புதியதாக கஸ்தூரிரங்கன் குழுவை நியமிக்கவும் வைத்தனர். சுப்பிரமணியன் குழு அறிக்கை தவிர்க்கப்பட்டு ஜவடேகரை அமைச்சகத்திற்கு கொண்டு வந்த பிறகு கஸ்தூரிரங்கன் குழு அமைக்கப்படும் வரையிலும் இந்த அமைப்புகள் என்ன செய்தன?

(தொடரும்)

கட்டுரையாளர்: முனைவர் தா.சந்திரகுரு

விருதுநகர்.