தில்லியில் கடந்த வாரம் தொடர்ச்சி யாக மூன்று நாள்கள் நடை பெற்ற கலவரத்தில், நாற்பதுக்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியான தையும், அதைவிடப் பல மடங்கு பேர் படுகாயமடைந்ததையும் பார்த்துத் தலைநகரம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தேசமும் தலைகுனிந்து நிற்கிறது.
பிரதமர் தொடங்கி முப்படைகளின் தளபதி வரை அத்தனை அதிகார மையங்களும் குவிந்திருக்கும் தில்லி மாநகரிலேயே, இப்படி ஒரு வெறி யாட்டத்தைக் காவல்துறையைச் சாட்சி யாக வைத்துக் கொண்டே கலவரக்கா ரர்களால் அரங்கேற்ற முடியும் என்றால், அதுவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வந்திருப்பதையும் பொருட்படுத்தாது கலவரக்காரர்களால் இப்படியொரு வெறியாட்டம் ஆட முடியும் என்றால்... கண்காணாத தூரத்தில் இருக்கும் சிறு நகரில் வசிக்கும் மக்களின் நிலையை யோசித்துப் பார்க்கவே உடல் நடுங்குகிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த எண்பது நாள்களுக்கு மேலாக மக்கள் ஒன்று கூடிக் குரல் எழுப்பிப் போராடியபோது எந்தக் கலவரமும் நடைபெறவில்லை. ஆனால் போராட்டங்களை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டபோதுதான் வன்முறை பெரிய அளவில் வெடித்திருக்கிறது. இதற்கு முன்பே தில்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் காவல்துறையின் அத்துமீறலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கும்பல் தாக்கு தலும், வன்முறையை விதைக்கும் பாஜக அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களின் பேச்சுக்களும், தனிமனித துப்பாக்கிச் சூடு வன்முறைகளும் தொடங்கிய போதே இதற்கான விதை விதைக்கப் பட்டுவிட்டது.
பாரதிய ஜனதா கட்சியினர் சொல்வ தைப் போல இந்தக் கலவரங்க ளுக்கும் உயிர் இழப்புகளுக்கும் குடி யுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்கள் காரணமா, சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்ட ஒரு சிலர் எதிர்த் தரப்பினரை வீதிகளில் ஓடவிட்டுத் துரத்தித் துரத்தித் அடித்தபோதும், அவர்கள் வாழும் பகுதிகளுக்குத் தீ வைத்தபோதும், அவை எதையும் கண்டு கொள்ளாத காவல்துறை காரணமா, “தேசத் துரோகிகளைச் சுட்டுத் தள்ளுங் கள்” என்று தங்கள் கட்சியினரை உசுப்பி விட்ட மத்திய மந்திரியும், எம்.பி.க்களும் காரணமா, நீதிமன்றம் தலையிடும் வரை கலவரக்காரர்களுக்கு எதிராக ஒரே ஒரு முதல் தகவல் அறிக்கையைக்கூடப் பதிவு செய்யாமல் இருந்த அரசு நிர்வாகம் காரணமா, குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுகிறவர்க ளின் தரப்பு வாதம்தான் என்ன என்பதைக் காது கொடுத்து கூடக் கேட்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கும் மத்திய அரசு காரணமா?
காரணம் எதுவாக வேண்டுமானா லும் இருந்துவிட்டுப் போகட்டும். இந்த நாட்டில் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெற்றால் அவை எப்படிக் கையாளப்படும் என்பதை தில்லி கலவரம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமாக இருந்தாலும் ஜல்லிக்கட்டு எதிர்ப்புப் போராட்டமாக இருந்தாலும் அது வன்முறையில் முடிவதற்குப் பின்னால் இருக்கும் நோக்கங்கள் என்ன என்கிற கேள்வி எழுகிறது.
போராட்டங்களை அச்சுறுத்தி ஒடுக்கி விட்டாலும் நாட்டில் ஒரு பகுதியினரை நிரந்தர அச்சத்தில் ஆழ்த்திவிட்டு நடை பெறும் எந்த நிர்வாகமும் ஒட்டுமொத்த தேசத்துக்கும் நிம்மதியைத் தராது.
நன்றி : ஆனந்த விகடன் 11.3.2020