கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 20
இந்திய முற்போக்கு நாடக சங்கம் (IPTA) - இப்டாவில் அங்கம் வகித்து அதன் பெருமையை உலகம் முழுவதும் நிலைநாட்டியவர் குவாஜா அகமது அப்பாஸ் - கே.ஏ.அப்பாஸ். நாவல்கள், சிறுகதைகள், சினிமா திரைக்கதை வசனம், திரை இயக்குநர், பத்திரிகையாளர், தனிப்பத்திகள் எழுத்தாளர் என பன்முகப் பரிமாணம் பெற்றவர் அப்பாஸ். தனது தோழர்களோடும் இப்டா உறுப்பினர் திரைப்படத் தயாரிப்பாளர் பிருதிவிராஜ் கபூரோடும் நெருக்கமாக இருந்தார். அப்பாஸ் எழுதியவை 73 நூல்களாகும். அவரைப் பற்றி மற்றவர்கள் 9 நூல்களை வெளியிட்டுள்ளனர்.
அப்பாஸ் முதன் முதலாக வங்கப் பஞ்சம் குறித்து இப்டா நடத்தி வந்த ‘தர்த்தி கி லால்” நாடகத்தை திரைப்படமாக இயக்கினார். இந்தியாவில் அதுதான் சமூக யதார்த்த சினிமாவின் துவக்கமாகத் திகழ்ந்தது. நீச்சா நகர், நயாசன்சார், ஜக்தே ரஹோ, சாத் இந்துஸ்தானி போன்ற இவரது படங்கள் தேசிய, சர்வதேசப் பரிசுகளைப் பெற்றன. ரஷ்யா இவரைக் கொண்டாடியது. பிருதிவி ராஜ்கபூரின் மகனான ராஜ்கபூரின் ஆவாரா, ஸ் ரீமான் 420, மேரா நாம் ஜோக்கர், பாபி, ஹென்னா போன்ற படங்களை இயக்கினார். அவரது படங்கள் அனைத்தும் வெற்றிபெற்றன. பத்திரிகைகளில் சிறப்பு பத்திகள் வெளியிடுவதை முதன்முதலில் அப்பாஸ் தான் ‘பாம்பே கிரானிக்கல்’லில் துவக்கி வைத்தார். பிளிட்ஸ் வார ஏட்டிலும் எழுதினார்.
இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையைக் கொண்டு வந்த போது அதை எதிர்த்து பிளிட்ஸ் பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து வந்தார். அவர் “நான்கு நகரங்கள்” என்று ஒரு டாக்குமென்டரி படம் எடுத்தார். அதில் தில்லி, பம்பாய், கல்கத்தா, சென்னை ஆகிய நான்கு நகரங்களில் உழைப்பாளி மக்களின் வறுமைப்பட்ட வாழ்வு, மேட்டுக்குடியினரின் ஆடம்பர வாழ்வு பற்றி தோலுரித்துக் காட்டியிருந்தார். சென்சார் போர்டு அப்படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட் வழங்கியது. ‘யு’ சர்டிபிகேட் கோரி அப்பாஸ் உச்சநீதிமன்றம் வரை சென்றார். ஆனால் கிடைக்கவில்லை. விடுதலைப் போராட்ட காலக்கட்டத்தில் உருது இலக்கியமே மேலோங்கியிருந்தது. பிரேம்சந்த் போன்றவர்கள் கூட உருதுமொழியில்தான் எழுதினர். இந்திய - பாக். பிரிவினைக்குப் பிறகே இந்தி இலக்கியம் தலைதூக்கியது. உருது மொழியில் எழுதிக் கொண்டிருந்தவர்கள் இந்தியில் எழுதத் துவங்கினர்.
அப்பாஸ் எழுதிய “இன்குலாப்” என்ற நாவல் மதவிரோத குரோதங்களையும், அதனால் விளையும் வன்முறைகளையும் அம்பலப்படுத்தியது. இந்த நாவல் இந்தியமொழிகளிலும் ரஷ்யன், ஜெர்மன், இங்கிலீஷ், பிரெஞ்சு, அரபி மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அப்பாஸ் தனது திரைப்படங்களுக்கான கதைகளை இப்டா தலைவர்களான பிரேம்சந்த் முதல் முல்க்ராஜ் ஆனந்த் வரையிலான எழுத்தாளர்களிடமிருந்து பெற்றார். உழைப்பாளி மக்களின் துயரங்கள் முதல் காதல் வரை அருமையான படங்கள் எடுத்தார். தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் ‘சாத் இந்துஸ்தானி’ படத்தில் அமிதாப் பச்சனை அறிமுகப்படுத்தினார். அமிதாப்பின் தந்தை இப்டா தலைவர்களில் ஒருவராக இருந்தவர். இப்படம் விருதுபெற்றதாகும்.
அப்பாஸ் இலக்கியம், இலக்கியமல்லாத வசனங்கள் பற்றி பல பெரிய மனிதர்களைப் பேட்டி கண்டு அவற்றை வெளியிட்டார். ரஷ்யப் பிரதமர் குருச்சேவ், அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், சார்லி சாப்ளின், சீனத் தலைவர், மாசேதுங், விண்வெளி வீரர் யூரி ககாரின் போன்றவர்களைப் பேட்டி எடுத்துள்ளார். இவரது ‘நக்சலைட்டுகள்’ என்ற படத்திற்கு 1980ல் தங்க மயில் பரிசு கிடைத்தது. ரஷ்யாவிலிருந்தும்,சாகித்ய அகாடமியிலிருந்தும் பல விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன. இப்டாவுக்கு வெளியில் இருந்தவர்களுக்கும் அப்பாஸ் திரைக்கதை வசனம் எழுதிக் கொடுத்தார். கொரியப் போர்க்காலத்தில் சீனா சென்ற டாக்டர் கோட்னீஸ் கதையை அப்பாஸ் எழுதினார். பிரபல இயக்குநர் சேத்தன் ஆனந்த்துக்கு நீச்சாநகர் படக்கதையை எழுதினார்.
அப்பாஸ் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞர் பட்டம் பெற்றவர். சென்சார் போர்டு கேசில் உச்சநீதிமன்றத்தில் அவரே வாதாடினார். அரியானா மாநிலம் பானிபட் நகரில் 7-6-1914ல் பிறந்த குவாஜா அகமது அப்பாஸ் 1-6-1987ல் பம்பாயில் காலமானார். அவரது படைப்புகளில் இன்குலாப், தண்ணீர் என்ற இரு நாவல்கள் முன்பு தமிழில் வந்திருந்தன. புகழ்மிக்க படைப்பாளியான அப்பாஸ் இந்தியர்களின் இதயங்களில் நீங்காமல் நிறைந்திருப்பார்.