tamilnadu

img

இந்தியாவின் ஜிடிபி 5.8 சதவிகிதமாக சரியும்!

புதுதில்லி:
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜிடிபி), 2019 - 20 நிதியாண்டில், 5.8 சதவிகிதமாகவே இருக்கும் என்று சர்வதேச கடன்மதிப்பீட்டு நிறுவனமான ‘மூடிஸ்’ கூறியுள்ளது.மூடிஸ் நிறுவனம், 2019-20 நிதியாண்டின் துவக்கத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், 2020 மார்ச் முடிவில், இந்தியாவின் ஜிடிபி 6.8 சதவிகிதமாக இருக்கும் என்று கூறியது. பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம், ஜிடிபி மதிப்பை 6.2 சதவிகிதம் என்று 6 புள்ளிகளைக் குறைத்தது.தற்போது அக்டோபரில் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், முந்தைய கணிப்பிலிருந்து இந்த மதிப்பை மேலும் 0.4 புள்ளிகள் குறைத்து, 5.8 சதவிகிதத்திற்கு கொண்டு சென்றுள்ளது.தற்போதைய மந்தமான பொருளாதார வளர்ச்சி நீடிக்கும்பட்சத்தில், அரசின் நிதி திரட்டும் திட்டங்களுக்கான வாய்ப்புகள் குறைந்து, கடன் சுமை அதிகரிப்பதை தவிர்க்க முடியாது எனவும் ‘மூடிஸ்’ எச்சரித்துள்ளது.

இதனிடையே, ‘மூடிஸ்’ நிறுவனத்தின் குறைக்கப்பட்ட வளர்ச்சிக் கணிப்பு வெளியானதன் காரணமாக வியாழக்கிழமையன்று பங்கு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க சரிவு காணப்பட்டது. முக்கியத் துறைகளின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.‘பிட்ச் குரூப்’ என்ற மற்றொரு தனியார் நிறுவனமும் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறித்த கணிப்பை 6.7 சதவிகிதத்தில் இருந்து 6.1 சதவிகிதமாக மாற்றியுள்ளது. ரிசர்வ் வங்கி, சில நாட்களுக்கு முன்புதான் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பை 6.6 சதவிகிதத்தில் இருந்து, 6.1 சதவிகிதமாக குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.