tamilnadu

img

நான்கு பெஷாவர் சதி வழக்குகள் - என்.ராமகிருஷ்ணன்

ரஷ்யாவில் மார்க்சியப் பயிற்சி பெற்று இந்தியா திரும்பும் கம்யூனிஸ்டுகளை ஆரம்பத்திலேயே ஒடுக்கி விடுவதென்று தீர்மானித்த ஆங்கிலேய அரசாங்கம் தனது முதல் தாக்குதலை பெஷாவரில் துவங்கியது.  மாஸ்கோவிலிருந்து இந்தியா திரும்ப முயன்றவர்களில் ஒருவர் முகமது அக்பர். அவரும் அவருடன் வந்த பகதூரும் பெஷாவர் நகரை அடைய முயன்றபோது 1921 செப்டம்பர் 25ஆம் நாள் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் முகமது அக்பரின் தந்தையார் ஹபீஸ்சுல்லாகானும் கைது செய்யப்பட்டார். இதுதான் பெஷாவர் சதி வழக்கு. இதற்கு தாஷ்கண்டிலிருந்த ராணுவப் பள்ளியில் முகமது அக்பர் பயின்றார் என்பதே முக்கிய ஆதாரமாகச் சொல்லப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரேசர் பின்வருமாறு கூறினார். “அமைக்கப்பட்ட அரசுகளையெல்லாம் அகற்றுவது என்பதே போல்ஷ்விக்குகளின் போக்கு என்பது ஒரு பொது அறிவு ஆகும். இந்த பொது அறிவினை வைத்தே தீர்ப்பினை வழங்க முடியும்...”  

(அருணன் எழுதிய ‘இந்திய கம்யூனிச இயக்க வரலாறு’ நூலில் மேற்கோள்)

அகமது அக்பர்கான் (26 வயது), அவருடைய தந்தையார் ஹபீஸ்சுல்லாகான் (வயது 52) மற்றும் பகதூர் (வயது 18) ஆகிய மூவரும் பெஷாவர் சிறையில் அடைக்கப்பட்டனர். இம்மூவர் மீதும் இந்தியத் தண்டனைப் பிரிவுச்சட்டம் 121ஏயின் கீழ் சதி வழக்கு போடப்பட்டது. இச்சட்டப் பிரிவானது இங்கிலாந்து மன்னரும், பேரரசருமானவர் மீது யுத்தம் தொடுப்பதற்கு சதி செய்தனர் என்பனவாகும். ஜே.எச். பிரேசர் என்ற ஐ.சி.எஸ். அதிகாரியை நீதிபதியாகக் கொண்ட நீதிமன்றம் முகமது அக்பர்கானுக்கு மூன்றாண்டு கடுங் காவல் தண்டனையும், பகதூருக்கு ஓராண்டு கடுங் காவல் தண்டனையும் விதித்தது. ஹபீசுல்லாகான் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவர் விடுதலை செய்யப்பட்டார். இதுதான் முதல் பெஷாவர் சதிவழக்கு. 

இரண்டாவது பெஷாவர் சதி வழக்கு

முதல் பெஷாவர் சதி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முகமது அக்பர்கான் மீதும் அவருடன் ஹாசன் மற்றும் குலாப் மகபூப் ஆகிய இருவரையும் சேர்த்து போடப்பட்ட வழக்குதான் இரண்டாவது பெஷாவர் சதிவழக்கு. குற்றச்சாட்டு என்ன? மூன்றாண்டு கடுங் காவல் தண்டனை விதிக்கப்பட்டு முகமது அக்பர்கான் சிறையிலிருந்தபோது அதிகாரிகளுக்கு தெரியாமலேயே வெளியில் உள்ளவர்களுக்கு ஏழு அல்லது எட்டுக் கடிதங்கள் அனுப்பினார் என்பதுதான். இந்தக் கடிதத்தை அந்த மாகாணத்திற்கு வெளியில் உள்ளவர்களுக்கு அனுப்பினார் என்றும், இது ராஜ துரோகம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.  இந்தக் கடிதங்கள் ஒரு ரயில் நிலைய மேடையில் நின்று கொண்டிருந்த குலாம் மகபூப் என்பவரிடமிருந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார். இந்தக் கடிதங்களை பணத்திற்காக நகல் எடுத்ததற்காக முகமது ஹாசன் கைது செய்யப்பட்டார். 

இப்பொழுது இந்த மூவர் மீதும் ராஜத் துரோக வழக்கு போடப்பட்டது. இதில் முகமது அக்பர்கானுக்கு 7 ஆண்டு கடுங் காவல் தண்டனையும், அதுவும் தனிமைச் சிறையில் மூன்று ஆண்டு வைக்கப்பட வேண்டுமென்று நீதிபதி பிரேசர் உத்தரவிட்டார். மற்ற இருவருக்கும் 5 ஆண்டு கடுங் காவல் தண்டனையும், இதில் அவர்கள் மூன்று மாதம் தனிமைச் சிறையில் அடைக்கப்பட வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டது. 

மூன்றாவது சதி வழக்கு

இந்த மூன்றாவது பெஷாவர் சதி வழக்கு என்பது ‘மாஸ்கோ சதி வழக்கு’ என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது. இது 1922 - 23ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்டது. இந்த வழக்கில் பின்வருபவர்கள் குற்றம் சாட்டப்பட்டார்கள்:

1. முகமது அக்பர் ஷா (23 வயது)
2. முகமது கவுகார் ரஹ்மான் கான் (27)
3. மீர் அப்துல் மஜித் (21)
4. ஹபீப் அகமது
5. ரபீக் அகமது (24)
6. சுல்தான் அகமது (24)
7. பெரோசுதீன் மன்சூர் (21)
8. அப்துல் காதிர்கான்
 

இந்தச் சதி வழக்கில் 1923ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முகமது அக்பர்கான், கவுகார் ரஹ்மான்கான் ஆகிய இருவருக்கும் இரண்டாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அப்துல் மஜீத், பெரோசுதீன் மன்சூர், ஹபீப் அகமது, ரபீக் அகமது, சுல்தான் அகமது ஆகிய ஐவருக்கும் ஓராண்டுக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அப்துல் காதிர்கான் விடுவிக்கப்பட்டார். பெரோசுதீன் மன்சூர் பின்னாட்களில் வடமேற்குப் பகுதியில் பிரபல கம்யூனிஸ்ட் தலைவராக விளங்கினார்.

நான்காவது பெஷாவர் சதி வழக்கு

தாஷ்கண்ட் நகரில் கூட்டப்பட்ட முதல் இந்தியக் கம்யூனிஸ்ட் குழுவின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது ஷாபிக் 1923ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதி பெஷாவருக்கு வந்தார். உடனே அவர் கைது செய்யப்பட்டு அவருக்கு மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.  இந்தக் கம்யூனிஸ்ட்டுகளை ஏன் தண்டிக்கிறோம் என்பதற்கு அந்த நீதிபதி பிரேசர் கூறிய காரணம் பின்வருமாறு:

“உண்மையான கம்யூனிசக் கோட்பாட்டை
ஏற்றுக் கொண்டவர்கள் என்ற காரணத்தினால் 
இவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்படவில்லை.
மாறாக ராயும், போல்ஷ்விக்குகளும் பின்பற்றும்
கம்யூனிசத்தின் தூதுவர்கள் என்கிற 
காரணத்தால்தான் இந்த தண்டனை!”

 

இந்திய நாட்டில் மார்க்சியத்தைப் பரப்புவது என்ற லட்சியத்தை மனதார ஏற்றுக் கொண்டு அப்பணியில் இறங்கிய இளம் முஸ்லிம் தோழர்கள் ஏற்றுக்கொண்ட தண்டனைகளும், சித்ரவதைகளும் கொடூரமானவை. இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காக எண்ணற்ற வேதனைகளையும் துன்பங்களையும் தாங்கி இந்திய மண்ணில் அதற்கு வித்திட்ட நமது இளம் முஸ்லிம் தோழர்களை கரம் உயர்த்தி வாழ்த்துவோம். அவர்தம் நினைவைப் போற்றுவோம்.

ஆதாரம் : முசாபர் அகமது எழுதிய
Myself and the Communist Party of India