tamilnadu

img

கலை உலகத்திலும், கள இயக்கத்திலும் பிரகாசித்த பால்ராஜ் சஹானி - எஸ்.ஏ.பெருமாள்

கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 19

பால்ராஜ் சஹானி நடிகராகவும் எழுத்தாளராகவும் வாழ்ந்தவர். 1.5.1913ல் ராவல்பிண்டியில் பிறந்தவர். லாகூரில் அரசுக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ.பட்டம் பெற்றார். தமயந்தி சஹானியை திருமணம் செய்தார். 1930ல் தனது மனைவியுடன் ஆசிரியப் பணிக்காக கல்கத்தாவுக்கு சென்று தாகூரின் சாந்திநிகேதன் விஸ்வபாரதி யுனிவர்சிடியில் சேர்ந்தார். அங்கு ஆங்கிலம், இந்தி கற்பித்தார். 1938ல் பால்ராஜ் மகாத்மா காந்தியுடன் ஓராண்டு தொண்டராக இருந்தார். பின்பு காந்தியின் ஆசியோடு லண்டன் பி.பி.சி.யில் இந்தி செய்தி வாசிப்பாளர் பணியில் சேர்ந்தார். 1943ல் நாடு திரும்பினார். இப்டாவின் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். அவரது மனைவி தமயந்தி ஏற்கெனவே அதில் நடிகையாக இருந்தார். பின்பு சினிமா வாய்ப்புக்காக மும்பை சென்றனர். அங்கு கே.ஏ.அப்பாஸ் இயக்கத்தில் “இன்சாப்”, தர்த்தி கி லால் ” ஆகிய படங்கள் 1946ல் வெளியானது. பெயரும் புகழும் கிடைத்தது. அவரது மனைவி தமயந்தியும் ”தூர் சஸியே இன்““ மற்றும் சில படங்களில் நடித்தார். 1953ல் பிமல்ராயின் ”தோ பிகா ஜமீன்” வெற்றிப்படமாகி கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் பரிசு பெற்றது. தொடர்ந்து அவர் நடித்த தாகூரின் “காபூலி வாலா“ பெரும் வெற்றிபெற்றது.

தமயந்தி சினிமாவில் கதாநாயகியாகவே நடித்தார். 1947ல் அவர் நடித்த ‘குடியா“ படம் வெற்றிபெற்றது. அதே ஆண்டு இறுதியில் கொஞ்ச வயதிலேயே காலமானார். இரண்டாண்டு கழித்து பால்ராஜ் தமயந்தியின் தங்கை சந்தோஷ் சந்தோக்கை திருமணம் செய்துகொண்டார். சந்தோசும் டெலிவிசன் நாடகங்களை எழுதினார். புகழ்பெற்ற நடிகைகள் பத்மினி, நாட்டன், மீனாகுமாரி, வைஜயந்திமாலா, நர்கீஸ் போன்றவர்களுடன் பால்ராஜ் கதாநாயகனாக நடித்தார். பிந்தியா, சீமி, சோனி சி சிடியா, சுட்டா பஜார், பாபிசி சுடியான், கத்புட்ஸி, லஜ்வந்தி, கர்சன்சார், நீல்கமல்,கர்கர்கஹானி, தோராஸ்தே, ஏப்பூல் தோமாலி  போன்ற அவரது படங்கள் வெற்றியும் பாராட்டும் பெற்றன. ‘வக்த்“ என்ற படத்தில் அவரது பாடல் “ஆயிமெரிஜோரா ஜபீன்“ என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் படைக்கப்பட்டது. அசலா சச் தேவ் இதில் கதாநாயகியாக நடித்தார். 1946 முதல் 1970 வரை பால்ராஜ் சினிமா நடிகராய் பிரகாசித்தார். பஞ்சாபி மொழியிலும் இரு படங்கள் நடித்தார். அவர் கடைசியாக நடித்த படம் ‘கரம் ஹவா“ இது இந்தியா - பாக் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்குச் செல்ல மறுக்கும் ஒரு முஸ்லிம் பற்றிய கதையாகும். படம் முடித்து டப்பிங்கும் பேசி முடித்த பின் அவர் காலமானார். அத்திரைப்படத்திற்கு சோவியத் நாடு நேரு பரிசு பெற்றது. அப்படத்தில் கடைசியாக கூறிய வாசகம் “ஒரு மனிதன் எவ்வளவு காலம் தனிமையில் வாழ்வது?” என்பதாகும்.

அவர் சிறந்த ஆங்கில எழுத்தாளர். பின்பு தனது தாய்மொழி பஞ்சாபில் சிறந்த இலக்கியங்களை உருவாக்கினார். 1960ல் பாகிஸ்தான் சென்று வந்தார். “எனது பாகிஸ்தான்” என்ற நூலை எழுதினார். 1969ல் ரஷ்யா சென்று வந்து அந்த  நினைவுகளை எழுதினார். அவர் பல கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதிக் குவித்தார். எனது சினிமா அனுபவங்கள் என்ற நூலும் எழுதியுள்ளார். நல்ல வாசிப்புத் திறனும் படைப்புத் திறனும், இடதுசாரி அரசியலும் கொண்டவராக வாழ்ந்து மறைந்தார். பால்ராஜ் சஹானியும் பி.கே.வாசுதேவன் நாயரும் இணைந்து அகில இந்திய இளைஞர் அமைப்பை உருவாக்கினார். தில்லியில் சிறந்த கம்யூனிஸ்ட் தலைவரான குரு ராதாகிருஷ்ணன் முன் நின்று வாலிபர் மாநாட்டை நடத்திக் கொடுத்தார். இம்மாநாட்டில் 250 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். வாலிபர் சங்கத்தின் முதல் அகில இந்தியத் தலைவராக பால்ராஜ் சஹானி தேர்வு செய்யப்பட்டார். இது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பாகும். இதை பொதுவான அரசியல் தலைவர்களும், கம்யூனிஸ்ட் தலைவர்களும் நாடு முழுவதும் வரவேற்றனர்.

1951ல் பால்ராஜ் “பாஜி” என்ற படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதினார். இப்படத்தை குருதத் இயக்க தேவ் ஆனந்த் நடித்தார். 1969ல் பால்ராஜ் சஹானிக்கு பத்ம ஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது. தில்லியில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் ஒரு நூலகம் அமைத்து, வாசகர் வட்டத்தையும் பால்ராஜ் உருவாக்கினார். அவர் எளிமையாக வாழ்ந்தார். ஆடம்பரமின்றி எளிமையாகவே நடித்தார். சினிமாவில் அவர் தேவையற்ற சிக்கல் எதிலும் சிக்கவில்லை. சினிமாவில் ஒரு ரோல் மாடலாய் திகழ்ந்தார். தோ பிகா ஜமீன் படம் மூலம் நவயதார்த்த சினிமா என்றால் என்ன என்பதைக் காட்டினார்.

பால்ராஜ் குடும்பமே தோழர் பி.சி.ஜோஷியின் ஆணைப்படி கட்சிக் குடும்பமானது. அவர் கட்சி ஊழியரானார். அவரது மனைவி தமயந்தி கதாநாயகியாக நடித்ததில் கிடைத்த பணத்தை கட்சிக்குக் கொடுத்தார். இப்டாவில் உறுப்பினராக இருந்த பிருதிவிராஜ் கபூர், அமியா சக்ரவர்த்தி, புகழ்பெற்ற இசையமைப்பாளரும், நாட்டுப் புறப்பாடல்களைப் பரப்பியவருமான எஸ்.டி. பர்மன் ஆகியோர் அடிக்கடி சந்தித்து இப்டாவை செழுமைப்படுத்தினர். இப்டாவின் மத்தியக்குழு தமது கலாச்சார வாழ்வில் தனித்தன்மையுடன் திகழுகிறது என்று பாராட்டப்பட்டது.

1948ல் தோழர் பி.டி.ரணதிவே செயலாளரான காலத்தில் கட்சி தடைசெய்யப்பட்டதால் அப்போது இப்டா கலைக்கப்படும் நிலை ஏற்பட்டது. எனினும் பால்ராஜ், தமயந்தி போன்ற கலைஞர்கள் உறுதியாக நின்று இப்டாவின் பாரம்பரியத்தை நிலைநாட்டினர். பால்ராஜ், தமயந்தி இருவரும் சினிமாவில் சம்பாதித்த பணத்தை கட்சிக்கும், நலிந்த கலைஞர்களுக்கும் அளித்து உதவினர். ஜோஷியும் இதில் இணைந்து நாடகங்களில் நடித்தார். அவரது மகள் ஷப்னம் மறைவும், பின்பு அவரது மனைவியின் மரணமும் பால்ராஜை உலுக்கிவிட்டது. ஜோஷி எவ்வளவோ பேசியும் அவரது சோகத்தை தேற்ற முடியவில்லை. எனினும் ஜோஷியின் வேண்டுகோளுக்கிணங்க 1972ல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசினர். ஆர்எஸ்எஸ் மாணவர்கள் தெரிவித்த எதிர்ப்பை மீறி மதவெறியால் நாடு அடைந்த இன்னல்களை தொகுத்துப் பேசினர். மாணவர்கள் அவரது பேச்சை வரவேற்று ஆரவாரம் செய்தனர்.

லண்டனில் அவர் அறிவாற்றலின் வெளிச்சத்தை தேடிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் விஞ்ஞான சோசலிசத்திற்கு வந்து தோழர் பிராட்லி மூலம் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார். இறுதிவரை மக்கள் சேவை, அவர்களுக்கு அறிவுவெளிச்சம் தந்து மக்களை செயல்படுமாறு தூண்டினார். சோசலிச தீபத்தை அவர் உயர்த்திப்பிடித்தார். சினிமா உலகிலும் அவர் சமரசம் செய்து கொள்ளாமல் நல்லதே செய்தார். தனது இறுதிநாட்களில் பசுமை தவழும் தனது பஞ்சாபிலேயே கழிக்க விரும்பினார்.  அறுபதாவது பிறந்த நாளைக் கொண்டாட இருந்தபோது பால்ராஜ் திடீர் மாரடைப்பால் 13.4.1973ல் காலமானார். ஆண்டுதோறும் அவர் பெயரால் சிறந்த திரைப்படங்களுக்கு மும்பையில் 1973 முதல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.