அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு
புதுதில்லி,நவ.17- அயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது. அயோத்தியில் பாபர் மசூதியை சங் பரிவாரக்கும்பல் இடித்து தகர்த்தது. இங்குள்ள 2.77 ஏக்கர் நிலத்தை ராம்லல்லா அமைப்புக்கு வழங்க உத்தர விட்டும், அங்கு ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தும் உச்சநீதிமன்றம் நவம்பர் 9 அன்று தீர்ப்பளித்தது. முஸ்லிம்கள் மசூதி கட்டிக்கொள்வதற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கவும் உத்தரவிட்டது. இந்த நிலையில், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் அவசர செயற்குழு கூட்டம் நவம்பர் 17 அன்று காலை 11 மணியளவில் உத்தரப்பிரதேச மாநிலம் தலைநகரான லக்னோவில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் மவுலானா ஹசன் நத்வி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யவும், அயோத்தி தீர்ப்பில் சில அம்சங்களை மாற்றக்கோரியும் முடிவு செய்துள்ள தாக கூறப்படுகிறது. விரைவில் சீராய்வு மனு தயார் செய்யப்பட்டு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அயோத்தி வழக்கில் ஒரு தரப்பினரான ஜாமியத் உலாமா இ இந்த் அமைப்பு, அரசு கையகப்படுத்தி வைத்துள்ள 67 ஏக்கர் நிலப்பரப்புக்கு வெளியே 5 ஏக்கர் நிலம் தந்தால் ஏற்க மாட்டோம் என கூறியுள்ளது. மற்றொரு தரப்பான உத்தரபிரதேச சன்னி மத்திய வக்பு வாரியம், மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.