tamilnadu

ஏசியை 24 டிகிரி செல்சியஸில் வைத்தால் பணத்தை மிச்சப்படுத்தலாம்!

ஏசியை 24 டிகிரி செல்சியஸில் வைத்தால்  பணத்தை  மிச்சப்படுத்தலாம்!

சென்னை, ஜூன் 9 - வீடு மற்றும் அலுவலகங்களில் ஏ.சி பயன்படுத்துவோர் 24 டிகிரி செல்சியஸ் வைத்தால், இந்த கோடையில் மின் கட்டணம் அதிகரிப்பை தடுக்க முடியும் என எரிசக்தி திறன் மேம்பாட்டு அலு வலகம்(பிஇஇ) கூறியுள்ளது. கோடையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது ஏ.சி. பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. இதனால் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை செலுத்த வேண்டிய மின் கட்டணமும் மிக அதிகமாக உள்ளது. வெயில் அதிகமாக இருப்பதால் பலரும் தங்கள் ஏ.சி.யில் வெப்ப நிலை அளவை 20 முதல் 21 டிகிரி செல்சிய ஸில் வைக்கின்றனர். இதை 24 டிகிரியில் வைத்தால் மின்சாரம் உபயோகம் குறைந்து மின் கட்டணம் வெகுவாக குறையும் என எரிசக்தி திறன் மேம்பாட்டு அலுவலகம் (பிஇஇ) கூறியுள்ளது. ஏ.சியில் ஒவ்வொரு டிகிரி வெப்ப நிலையை அதிகரிக்கும்போதும், நம்மால் 6 சதவீதம் மின்சார உபயோகத்தை குறைக்க முடியும். ஏ.சி.யில் 24 டிகிரி முதல் 25 டிகிரி வெப்பநிலை வைத்தாலே, அறை குளிர்ச்சியாக இருக்கும். வெப்பநிலை அளவை குறைக்க, குறைக்க மின்சார உபயோகம் அதிகரிக்கும். நம்நாட்டில் ஏ.சி. பயன்படுத்துவோரில் 50 சதவீதம் 24 டிகிரி செல்லியஸ் என்ற அளவை பின்பற்றினால், ஆண்டுக்கு 1000 கோடி யூனிட் மின்சாரத்தை சேமிக்க முடியும். இது ரூ.5,000 கோடி அளவுக்கு சேமிப்பை ஏற்படுத்தும். மேலும், ஆண்டுக்கு 8.2 மில்லியன் டன் அளவுக்கு கார்பன் டை ஆக்ஸைடு வெளி யேற்றத்தையும் குறைக்கும்.