எத்தனைக் கட்சிகளை கூட்டணி சேர்த்தாலும் தமிழகத்தில் மதவாத சக்திகள் நுழைய முடியாது!
அமித் ஷாவுக்கு ஆ. ராசா பதிலடி
சென்னை, ஜூன் 9 தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் நுழைய முடியாது என்றும், எப்படிப்பட்ட கூட்டணி அமைத்தாலும் அதனை திமுக கூட்டணி வெல்லும் என்றும் அமித் ஷா-வுக்கு ஆ.ராசா பதிலடி கொடுத்தார். அமித் ஷாவின் வஞ்சம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்களன்று (ஜூன் 9) திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ. ராசா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “அமித் ஷாவின் பேச்சு அப்பட்டமான பொய், அருவருப்பான வஞ்சகம், பிளவுபடுத்தும் சூது. அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அருவருக்கத்தக்க வகையில் அமித் ஷா பேசியிருக்கிறார். அமித் ஷாவின் பேச்சு அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அவரது பேச்சை தமிழக மக்கள் ஒருபோதும் விரும்பவோ, ஏற்கவோ மாட்டார்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கிடைத்துள்ள நற்பெயரால் அச்சமடைந்துதான், அமித் ஷா தமிழகம் வந்திருக்கிறார். பாஜகவின் எந்தவித மத அரசியலும், பிளவுவாத அரசியலும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. திமுக ஆட்சிக்கு அச்சப்பட்டுத்தான் தமிழகத்திற்கு வந்து அமித் ஷா அவ்வாறு பேசியிருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். மோடியும், அமித் ஷாவும் தமிழகத்திற்கு வருவது அதிகரிக்க அதிகரிக்க திமுகவுக்கான வாக்குகள் அதிகரிக்கும். விவாதத்திற்கு அமித் ஷா தயாரா? மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் மோடி ஐந்து முறை வந்தார். சுதந்திர இந்தியாவில் இதுபோன்று பிரதமர் ஐந்து முறை ஒரு மாநிலத்திற்கு வந்த வரலாறு உள்ளதா? மோடியும், அமித் ஷாவும் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வர வேண்டும். அப்போதுதான் திமுகவிற்கான வாக்குகளும் அதிகரிக்கும். கடந்த மக்களவைத் தேர்தலில் எத்தனை முறை மோடி இங்கு வந்தாரோ நீலகிரித் தொகுதியில் அவ்வளவுக்கு வாக்குகள் அதிகரித்தது. ஒன்றிய நிதி ஒதுக்க வேண்டிய எய்ம்ஸுக்காக இன்னமும் மாநில அரசு காத்துக்கொண்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான விவாதத்திற்கு நான் கூப்பிடுகிறேன், அமித் ஷா தயாரா? தில்லியிலா? சென்னையிலா? புவனேஸ்வரத்திலா? எங்கு வேண்டுமானாலும் நான் வருகிறேன். ஆனால், இந்தியில் மட்டும் பேசாதீர்கள். பாஜக, ஒரு சித்தாந்தத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு மற்ற இடங்களில் வெற்றி பெறுகிறது. ஆனால் தமிழகத்தில் அது முடியாது. இங்கு மாற்றுச் சித்தாந்தம் உள்ளது. இந்தச் சித்தாந்தம் இருக்கும் வரை அவர்களால் இங்கு ஆட்சிக்கு வர முடியாது. நாங்கள் தில்லியோ, ஹரியானாவோ, மகாராஷ்டிராவோ அல்ல, நாங்கள் தமிழ்நாடு. முருகனை வைத்தும் அரசியல் மதுரையில் நடைபெறவுள்ள முருகன் மாநாடு குறித்த கேள்விக்கு ராசா பதிலளித்தார்: “அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே மதுரையில் முருகன் மாநாட்டை நடத்துகின்றனர். இந்து சமய அறநிலையத் துறை சார்பாக நடத்தப்பட்ட மாநாட்டைப் போல் அல்லாமல், இவர்கள் மதவாதத்தைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் சிறுபான்மையினருக்கு எதிராக அரசியல் செய்து ஆதாயம் தேட முயற்சிப்பதை மதுரை மக்களே விரும்பவில்லை. தமிழைப் பற்றி இவ்வளவு பேசும் அமித் ஷா, கீழடி ஆய்வையும், இரும்பு பயன்பாட்டின் அறிக்கையையும் ஒன்றிய அரசு திரும்பத் திரும்ப ஏன் நிராகரிக்கிறது என்பதற்கு பதிலளிக்க வேண்டும். தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும், திராவிடத்திற்கும் எதிரான மனநிலையை அவர்களே வெளிக்காட்டிக் கொள்கிறார்கள். அதற்கான தண்டனையை 2026 தேர்தலில் நிச்சயம் பாஜக அறுவடை செய்யும். இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வட இந்திய மொழிகளின் நிலைமை என்ன என்பதை யோசிக்க வேண்டும். இந்தியைக் கொண்டு வந்தவர்கள், அடுத்ததாக சமஸ்கிருதம் மொழியைக் கொண்டு வருவார்கள். தொகுதி மறுசீரமைப்பு அரசியல் தொகுதி மறுசீரமைப்பு கொண்டுவரும் முடிவை முன்பே எடுத்துவிட்டதன் காரணமாகத்தான் 800க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இருக்கும் வகையில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. அப்படியெனில் அது மக்கள்தொகை அடிப்படையில் நடக்கும். தமிழ்நாடு வஞ்சிக்கப்படும். தென் மாநிலங்களின் ஆதரவு இன்றி அவர்களால் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்ற முடியும். இதைத்தான் முதல்வர் சொல்கிறார். அமைதியைக் குலைக்க முயற்சி தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதை அமித் ஷா விரும்பவில்லை. இல்லாத சரஸ்வதி நாகரிகத்திற்கும் பேசாத சமஸ்கிருத மொழிக்கும் ஒன்றிய அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால், எங்கள் கீழடிக்கு எங்கள் நாகரிகத்திற்கு எங்கள் இரும்பு பயன்பாட்டிற்கு எந்த அங்கீகாரமும் கொடுக்க மறுக்கிறார்கள். நாங்கள் இந்தியாவுடன்தான் இருக்கிறோமா என்று கேட்க வேண்டியிருக்கிறது. இதற்கான தண்டனையை அவர்கள் 2026 தேர்தலில் பெறுவார்கள். திமுகவின் வெற்றி உறுதி மோடி, அமித் ஷா வருகை திமுகவின் வெற்றியையே உறுதி செய்யுமா என்ற கேள்விக்கு ராசா பதிலளித்தார்: “எத்தனை முறை மோடி தமிழகம் வந்தாரோ அத்தனை வாக்கு வித்தியாசம் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்குக் கிடைத்தது. தற்போது எத்தனை முறை அமித் ஷா தமிழகம் வருகிறாரோ அத்தனை வெற்றித் தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பற்றி பேச பாஜகவுக்கு எந்தத் தகுதியும் இல்லை. பில்கிஸ் பானு, மணிப்பூர் போன்றவற்றைப் பார்த்து மவுனமாக இருந்தார்கள். ஒரே இந்தியா, ஒரே தேசம் என்று சொன்னால், ஒடிசாவில் போய், ஒரு தமிழர் உங்களை ஆளலாமா என்று கேட்டவர் எப்படி ஒரே இந்தியா ஒரே தேசம் என கூற முடியும். பாஜகவினர் கூறுவது அனைத்தும் பொய். ஆர்எஸ்எஸ்ஸின் இலக்குக்கு மோடியும் அமித் ஷாவும் பகடைக்காய்.” இவ்வாறு ஆ. ராசா தெரிவித்தார்.