மேலவளவு படுகொலைவில் தண்டிக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து
கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறப்பட்டுள்ளதாவது,
மதுரை மாவட்டம், மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட 7 பேர்
1997ல் ஜூன் 30ந் தேதி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். சாதிய வெறியுடன்
பட்டப்பகலில் நடத்தப்பட்ட கொடூரமான கொலையாகும் இது. இந்த வழக்கில் 17 பேருக்கு
ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், ஏற்கனவே 4 பேர் விடுவிக்கப்பட்டு
விட்டனர். தற்போது நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வதாக கூறி
மீதமுள்ள 13 பேரும் கடந்த 9ந் தேதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதை
எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்
மதுரை கிளை கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ஆவணங்களை
சமர்ப்பிக்க வேண்டுமென்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக
வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கொடூரமான சாதிவெறி
அடிப்படையிலான படுகொலையில் தண்டிக்கப்பட்ட 13 பேரை தமிழக அரசு
சர்வசாதாரணமாக விடுவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இவர்களது விடுதலையை
ரத்து செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு
தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.