சமநீதி - சமூக நீதிப் போராளி!
தோழர் கே.எம் என்ற கே.முத்தையா, தமிழகத்தின் முதல் தலைமுறை கம்யூனிஸ்ட்டுகளில் ஒருவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கம்யூனிஸ்ட் குழுவின் தலைவராகச் செயல்பட்டவர். காவல்துறையின் கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்தவர். கட்சியின் அன்றைய சென்னை தலைமறைவு மையத்தில் செயலாளராகச் செயல்பட்டவர். தோழர் பி.சுந்தரய்யாவின் வழிகாட்டலில் இயக்கத்தை கட்டியவர். சென்னை மாவட்டத்தின் முதல் செயலாளர். ஜீவா ஆசிரியராக இருந்த காலத்தில் ஜனசக்தியின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். தீக்கதிர் நாளிதழின், செம்மலர் மாத இதழின் நீண்டகால ஆசிரியர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய முகமாக ஆய்வுப் புலமாகத் திகழ்ந்தவர். தமுஎ(க)ச வின் நிறுவன பொதுச் செயலாளர், தலைவர், கவுரவத் தலைவர் பணிகளில் தன்னைக் கரைத்துக் கொண்டவர். தமிழ் இலக்கியத்தை வர்க்க அடிப்படையில் ஆய்வு செய்த முன்னோடி. தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்க சமுதாயம், ராமாயணம் உண்மையும் புரட்டும் , சிலப்பதிகாரம் உண்மையும் புரட்டும், திருக்குறளின் குரல் ... என ஆய்வு நூல்களின் ஆசிரியர். உலைக்களம், விளைநிலம் நாவல்கள் தந்த நாயகர். செவ்வானம், ஏரோட்டி மகன் நாடகங்கள் படைத்தவர். ஆங்கிலப் புலமை மிக்கவராதலால் மார்க்சின் தத்துவத்தின் வறுமை - நூலை தமிழில் தந்தவர். மார்க்சிய வகுப்புகளை நடத்திய பேராசிரியர். சிறந்த பத்திரிகையாளராகத் திகழ்ந்து பல பத்திரிகையாளர்களை உருவாக்கியவர். பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளி. சமநீதி - சமூக நீதிப் போராளி! அவரது பாதையில் நமது பயணத்தை தொடர்வோம்!