tamilnadu

img

கல்லணை திறப்புக்கு முன் டெல்டா தூர்வாரும் பணி குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடுக!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஜூன் 12- கல்லணை திறப்புக்கு முன்பாக, டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் குறித்து, அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி.நடராஜன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “காவிரி டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக, குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன்12 ல் திறக்கப்படாத நிலையில், இந்தாண்டு பாசனத்திற்காக அணை ஜூன் 12 ல் திறக்கப்பட்டதில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தான்.  மேலும் ஒரே நேரத்தில் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசு உடன் செய்ய வேண்டும். குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும்பணிகள், குடிமராமத்து பணிகளை உடன் முடிக்கவேண்டும். தண்ணீர் வருவதற்குள் முடிக்க முடியாத பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும். தூர்வாரிட ரூ 69.24 கோடியும், குடிமராமத்து பணிகளுக்கு ரூ 96.26 கோடியும் டெல்டா மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது. 

இதில் எத்தனை பணிகள் நடைபெற்றுள்ளது. முடிக்க முடியாத பணிகள் எத்தனை, உள்ளிட்ட விபரங்களுடன் கல்லணை திறப்பதற்கு முன்பு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும் கூட்டுறவு வங்கிகள், வணிக வங்கிகளில் விவசாயிகளுக்கு நிபந்தனையற்ற பயிர்க்கடன் வழங்கவேண்டும். கடைமடை வரை தண்ணீர் சென்று நாற்று விடும் பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாக அனைத்து ஆறுகளிலும் முறை வைக்காமல் தண்ணீர் விட வேண்டும்.  தட்டுப்பாடில்லாமல் குறுகியகால விதை நெல் கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். விவசாயிகள் பயிர்கடன் உள்ளிட்ட விவசாய பயன்பாட்டிற்கான கூட்டுறவு, மற்றும் வங்கிகளில் கடன் பெறுவதற்கு கட்டாயம் கிசான் கிரெடிட் கார்டு (KCC) தேவை என்ற உத்தரவை நடப்பாண்டு செயல்படுத்தக் கூடாது. தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி அரசு நிர்ணயித்த விலையில் கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்” என்றார்.