tamilnadu

img

விழுப்புரத்துடன் இணைக்கக் கோரி சட்டமன்ற உறுப்பினரின் வீடு முற்றுகை

உளுந்தூர்பேட்டை, டிச.16-  புதியதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தங்கள் கிராமத்தை இணைக்கக்கூடாது. விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் எனக்கோரி 6-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் உளுந்தூர்பேட்டையில்  சட்டமன்ற உறுப்பினர் வீடு மற்றும் அலுவலகத்தை திங்களன்று(டிச.16) முற்றுகையிட்டனர். பின்னர் பெரியசெவலை அருகே ஆமூரில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதில் 2 பேர் பூச்சிமருந்து குடிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் ஏற்கனவே இருந்த ஆமூர், டி.கொளத்தூர், ஆமூர்குப்பம் துலக்கம்பட்டு, சரவணப்பாக்கம், கோவுலாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைக்கப்பட்டன. இதனால் கிராம பொதுமக்கள் அனைவரும் தங்களை விழுப்புரம் மாவட்டத்திலேயே இணைக்கக் வேண்டும் என கடந்த இருபது தினங்களுக்கு மேல் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இக்கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் டிசம்பர் 16 திங்களன்று காலை 11 மணிக்கு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், அதிமுகவின் மாவட்டச் செயலாளருமான குமரகுருவின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்த உளுந்தூர்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்த்து மனு அளித்து விட்டு செல்ல வேண்டும் என பொதுமக்கள் ஆத்திரத்துடன் சாலையிலேயே அமர்ந்ததால்  அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சட்டமன்ற உறுப்பினர் வீட்டிற்கு அனைவரையும் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். பேச்சுவார்த்தையில் திருப்திகரமான பதில் கிடைக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு திரும்பிச் செல்லும் வழியில் கடலூர், சித்தூர் சாலையில் ஆமூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவெண்ணெய்நல்லூர் காவல் துறையினர் விரைந்து சென்று அனைவரையும் கைது செய்தனர். உள்ளாட்சித் தேர்தல் ஆதாயத்திற்காக விழுப்புரம் மாவட்டத்தை பிரிக்கும்போது திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் இருந்த கிராமங்களை ‘எதன் கையிலோ கிடைத்த மாலையைபோல’ ஆளும் கட்சியினரின் ஆலோசனையின்பேரில் தமிழகஅரசு குளறுபடியாக பிரித்ததால் அதிருப்தியில் உள்ள இப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.