கள்ளக்குறிச்சி, பிப், 15- மாணவியர் விடுதி பெண் போதகர் காப்பாளினிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரைப் பற்றி பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட வாட்ஸ்அப் வீடியோ தொடர்பாக விசாரணை நடத்திட விசாகா கமிட்டிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குரலா உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட விடுதி பெண் காப்பாளர் கடந்த 12ஆம் தேதி வெளியிட்ட வாட்ஸ்அப் வீடியோவின் தொடர்ச்சியாக 14ஆம் தேதி மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை உள்ளிட்ட குழுவினர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்தனர். அப்போது, பாலியல் தொல்லை கொடுத்த மற்றொரு அரசு மாணவர் விடுதி காப்பாளர் எம்.முருகேசன் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர். மேலும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டக்குழு சார்பில் கண்டனம் தெரிவித்தும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 14ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்செயல்படும் மாணவியர் விடுதி ஒன்றினுள் போதகராக பணிபுரிந்து வருபவர் சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப்பில் கடந்த 12ஆம் தேதி வெளியிட்ட வீடியோ பதிவில் அதே துறையில் போதக காப்பாளராக பணிபுரிந்து வருபவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளது தொடர்பாக கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் 13ஆம் தேதி இதுகுறித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இந்த புகார் பாலியல் ரீதியான புகாராக உள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பாலியல் வன்கொடுமை புகார்களை விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட விசாகா விசாரணைக் குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளார். புகார் தொடர்பாக உடனடியாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு கமிட்டிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.