திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தற்போது தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. எதிர்வரும் காலங்களும் மழைக்காலமாக இருப்பதால், தொற்று அதிகமாகப் பரவ வாய்ப்புள்ளதாக மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், மாவட்ட எல்லைகள் படிப்படியாகத் திறந்துவிடப்பட்டதால் வெளி மாநில, மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சரியாக மாவட்ட நிர்வாகம் அறிவிக்காத நிலை உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் இரண்டு ஊரடங்கு காலத்தின் போது, மாவட்டத்தின் நகரப் பகுதிகளில் பரவலாக கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. பெரும்பாலான மக்கள் கட்டுப்பாடுகளைப் பின்பற்றினர். ஆனால் அதற்கு அடுத்த காலகட்டத்தில் ஊரடங்கை மக்கள் கடைப்பிடிக்கவில்லை. காரணம் வாழ்வாதாரத்திற்கு வேறு வழியில்லாத நிலையில் பலர் கிடைக்கும் வேலையைப் பார்ப்பதற்காக வெளியே வரத்தொடங்கினர்.
வெளி ஊர்களில் வசித்த தி.மலை மாவட்ட மக்கள்
விவசாயம், கால்நடை வளர்ப்பு மட்டுமே முழுத் தொழிலாக இருந்த திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த 10 ஆண்டுகளாக விவசாயம் செய்யமுடியாத சூழல் உருவானது. இதனால், பிழைப்பு தேடி ஆயிரக்கணக்கான மக்கள், சென்னை, பெங்களூரு, திருப்பூர், மும்பை போன்ற நகரங்களுக்கும், குவைத், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் சென்றனர். கொரோனா காரணமாக, அதில் பெரும்பாலான மக்கள் சொந்த ஊர் திரும்பினர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க இதுவே முக்கிய காரணமாகும். மாவட்டத்தின் நாவல் பாக்கம், காட்டாம்பூண்டி, கிழக்கு ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் தான் முதலில் பாதிப்பு பரவியது. அதன் பின்பு திருவண்ணாமலை நகரத்திற்கும் மாவட்டத்தின் மற்ற பிற பகுதிகளுக்கு நோய் பரவியது.
திருவண்ணாமலை நகராட்சியின் அலட்சியம்
திருவண்ணாமலை மாவட்டத்தில், மே ஒன்றாம் தேதியிலிருந்து 2வது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது நோய்த் தொற்று பாதிப்பைத் தடுக்க நகராட்சி பகுதிகளில் ஒருசில இடங்களில் மட்டும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தடைசெய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, பகுதிகளில் கூட, துப்புரவு பணிகளை நகராட்சி நிர்வாகம் முழுமையாகச் செய்யவில்லை. மாறாக, நகராட்சி ஊழியர் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டதால், நகராட்சி அலுவலகத்தையே மூட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையும் நகராட்சிக்கு ஏற்பட்டது. துப்புரவு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கூட, கையுறை, ஷூ உள்ளிட்ட கவசங்கள் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் அச்சத்துடன் பணிபுரிந்து வருகிறார்கள். மாவட்டத்தில் நோய்த்தொற்று காரணமாக ஆரணி, தண்டராம்பட்டு, மங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்கள், வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், தபால் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மளிகை, காய்கறி, உள்ளிட்ட கடைகள் மூடப்பட்டாலும், நேரடியாக மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று விற்பனை செய்யப்பட்டது. இந்த காலகட்டத்தில் அரசு மருத்துவமனை வளாகத்தில் கலை நிகழ்ச்சி உள்ளிட்ட, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை நடத்தும் நிகழ்ச்சிகளில், பொதுமக்கள், அரசுத் துறை அலுவலர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட கூட்டமாகப் பலரைச் சேர்த்தே நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தைத் தவிர்த்திருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். அரசு மருத்துவமனைகளில், கொரோனா சோதனை மையங்களுக்கு முன்னுரிமை தரப்பட்டது. தனியார் மருத்துவர்கள் நடத்தும் சிறு கிளினிக்குகள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லும்போது அவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாவட்ட நிர்வாகமும் இதில் தலையிட்டு கட்டணத்தை ஒழுங்குபடுத்தவில்லை. வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளி ஊர்களிலிருந்து வரும் பயணிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனைகளைப்போல் நகரப் பகுதிகளிலும், கிராமங்களிலும் வசிக்கும் மக்களிடம் போதுமான மருத்துவ சோதனைகள் நடத்தப்படவில்லை.
கிரிவலம் தடைக்கு மக்கள் ஆதரவு
திருவண்ணாமலையில், நோய்த்தொற்று மேலும் பரவாமல் இருக்கும் வகையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் பல லட்சம் மக்கள் கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலை வருவது வழக்கம். இந்நிலையில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த ஏப், மே, ஜூன், ஜூலை ஆகிய நான்கு மாதங்களாக திருவண்ணாமலையில் கிரிவலம் செய்ய தடைவிதிப்பட்ட செயலை மக்கள் வரவேற்றுள்ளனர்.
தனிமைப்படுத்தல் மையங்களில் மக்கள் அவதி
வெளி ஊர்களிலிருந்து திருவண்ணாமலைக்கு வரும் நபர்களை, தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் தனிமைப்படுத்தி, அவர்களுக்கு தொற்று சோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் திட்டமிடப்பட்டிருந்தது. அவ்வாறு செயல்படுத்தப்பட்ட, பல மையங்களில் தங்கவைக்கப்படும், பொது மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூடச் செய்யாத நிலை இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உதாரணமாக, தானிப்பாடி – தண்டராம்பட்டு சாலையில் உள்ள பாரத வித்யா மந்திர் கல்லூரில் செயல்பட்டு வந்த கொரோனா தனிமைப்படுத்தும் மையத்தில் ஒரே அறையில் 9 பேர் வரை தங்கவைக்கப்பட்டதாகவும், போதுமான கழிவறை, தண்ணீர் வசதி இல்லை என்றும், மருத்துவர்களோ, செவிலியர்களோ யாரும் வந்து பார்க்கவில்லை என்றும் அங்குத் தங்கியிருந்தவர்கள் கூறினர். மருந்து மாத்திரையும் வழங்கப்படவில்லை. முககவசம், கையுறை கூட வழங்கவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
தி.மலையில் வேகமெடுத்த தொற்று
மே முதல் வாரத்தில், வெளி மாவட்டங்களிலிருந்த வந்த 50, 60 நபர்களுக்கு பரவிய தொற்று, மே 17 ஆம் தேதி வாக்கில் 151 பேருக்கும், ஜூன் 1 அன்று 429 பேருக்கும், ஜூன் 15 தேதி வாக்கில் 702 பேருக்கும், ஜூன் 30 அன்று 1819 பேருக்கும் என வேகமெடுக்கத் துவங்கியது. தொடர்ந்து வேகமான பரவல் காரணமாக, ஜூலை 29ஆம் தேதி அன்று தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5823 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தவேண்டும், வீடு வீடாகச் சென்று பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும், காய்ச்சல் கண்டறியும் முகாம்களை அதிகப்படுத்தவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பு தொடர வேண்டும். தனிமைப்படுத்தும் மையங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கைகளை ஏற்ற மாவட்ட நிர்வாகம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அதிக அளவிலான பரிசோதனை மையங்களை ஏற்படுத்த வேண்டும், 50 வயதுக்கு மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், சுகாதார ஊழியர்களை கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது, அரசு அலுவலகங்கள், வங்கி, தபால் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அதிக மக்கள் கூடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கோரிக்கை விடுத்திருந்தது. அந்த கோரிக்கைகளை ஏற்று, மாவட்ட நிர்வாகம் உடனே அதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்தியது. மேலும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் கூறுகையில் வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாத மழைக் காலங்களில் கொரோனாவுடன் டெங்கு, மலேரியா உள்பட பல நோய்களும் பரவ வாய்ப்புள்ளதால், அதைத் தடுக்க முன்கூட்டியே திட்டமிட்டு தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் கொண்ட, கொரோனா சிகிச்சை மையங்களை அமைக்க வேண்டும், நகர்ப்புற, பேரூராட்சி பகுதிகளில் உள்ள மக்கள் அனைவருக்கும் தொற்று சோதனை நடத்த வேண்டும், சோதனை கருவிகள், தடுப்பு மருந்து, பாதுகாப்பு கவசங்களைக் கையிருப்பில் வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
-ஜோ. செந்தாமரைக் கண்ணன்