முதல்வர் அறிவித்த நிவாரண நிதி ஒரு மாதம் கடந்தும் கிடைக்காத கொடுமை
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி பல லட்சக்கணக்கான மக்களை பாதித்துள்ளதோடு, உயிரிழப்பு மட்டும் உலகில் இரண்டு லட்சத்தையும் தாண்டிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் மார்ச் 24ந் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை ஒட்டுமொத்தமாக முடங்கிக் கிடக்கிறது. இச்சூழ்நிலையில் அனைத்துப் பகுதி மக்களையும் பாதுகாக்க வேண்டிய மிகப் பெரிய கடமை ஆளும் அரசுகளுக்கு இருக்கிறது. ஆகவே, வாழ்க்கை முடக்கத்துக்குள்ளான மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நிவாரண நிதி வழங்க வேண்டுமென்ற குரல் ஓங்கி ஒலித்து வருகிறது.
இந்தியாவில் முதன்முதலில் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் கொரோனா நிதிக்காக ஒதுக்கீடு செய்து அந்நிதி மூலம் அத்தியாவசியப் பொருட்களும் நிவாரண நிதியும் அறிவிப்பு செய்த 10 தினங்களில் மக்களுக்கு கிடைக்கச் செய்துள்ளது. அதேபோல தமிழகத்திலும் உதவிட வேண்டுமென இடதுசாரி கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அனைவரும் வலியுறுத்திய பின் தமிழக அரசும் ரேசன் கார்டு உள்ளவர்களுக்கு ரூ. 1000/- மற்றும் ரேசன் கடைகள் மூலம் இம்மாதம் விலையில்லா பொருட்களாக வழங்கிட அறிவித்தனர். தமிழகம் முழுவதும் பல்வேறு சிரமத்திற்கும் மத்தியில் ரேசன் கடை ஊழியர்கள் இப்பணியை செய்து முடித்தார்கள். மீண்டும் மே மாத பொருட்கள் வழங்கிடவும் தயாராகி வருகிறார்கள்.
கட்டுமானம், ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ. 1000 மற்றும் 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் பாமாயில் வழங்கப்படும் என மார்ச் இறுதியில் தமிழக முதல்வர் அறிவித்தார். அதன்படி கட்டுமானம், ஆட்டோ தொழிலாளர்களின் பட்டியல் தயார் செய்து நிவாரண நிதியும், பொருட்களும் வழங்கி வருகிறார்கள்.
ஏப்ரல் மாதம் துவக்கத்தில் கட்டுமானம், ஆட்டோ தவிர்த்த இதர அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் நிவாரண நிதியும், அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியும், கட்டுமானம், ஆட்டோ தொழிலாளர்களுக்கு முழுமையாக நிவாரண நிதி சென்றடையவில்லை. இந்நிலையில் ஏப்ரல் 10 தேதிக்கு பின் கட்டுமானம், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஏற்கனவே அறிவித்த ரூ. 1000/-த்துடன் இன்னும் ரூ. 1000/- சேர்த்து ரூ.2000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பும், கள நிலவரமும் எப்படி உள்ளது என்று பார்த்தால், முதல்வர் அறிவித்த ரூ.2000 நிவாரண நிதியைப் பெற இன்னும் குறைந்தது இரண்டு மாதம் காலமாகும் என்பது தான் உண்மை. அந்த அளவிற்கு நமது அரசின் நிர்வாக கட்டமைப்பு உள்ளது.
உதாரணமாக, தேனி மாவட்டத்தில் கட்டுமானம், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் மொத்தம் 60ஆயிரம் பேர் வரை வாரியத்தில் பதிவு செய்துள்ளார்கள். இதில் கட்டுமானம், ஆட்டோ தொழிலாளர்கள் மட்டும் 30 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இதுவரை 27000 பேருக்கு விலையில்லா பொருட்கள் ரேசன் கடை மூலம் வழங்கப்பட்டுள்ளது. விடுபட்ட கட்டுமானம், ஆட்டோ தொழிலாளர்கள் தங்களது பெயரை தனியாகவும், தொழிற்சங்கம் மூலமாகவும் தொழிலாளர் துறைக்கு கொடுத்துள்ளார்கள். முதல்வர் அறிவித்த நிவாரண நிதி இதுவரை 17 ஆயிரம் பேருக்கு மட்டுமே வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. பல அரசுடமை வங்கிகளில் சில வங்கி கிளைகள் மட்டுமே இயங்குகின்றன. அதுவும் போதிய அளவில் இல்லை.
கட்டுமானம், ஆட்டோ தொழிலாளர்களில் சுமார் 5 ஆயிரம் பேர் தனியார் வங்கி கணக்கு எண் கொடுத்துள்ளார்கள். தனியார் வங்கியில் பணம் அனுப்ப அனுமதியில்லை. ஒரு நாளைக்கு 1000 முதல் 2000 தொழிலாளர்களுக்கு மட்டுமே பணம் போட முடிகிறது. மேலும் தேனி மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் பகுதிக்கு மேற்பட்ட ஊழியர்கள். நிரந்தரமில்லா தினக்கூலி ஊழியர்கள் கடுமையான சிரமத்திற்கு மத்தியில் இப்பணியை செய்து வருகிறார்கள். நிவாரண நிதி அனுப்பத் துவங்கி ஒரு மாதம் ஆகியும் கட்டுமானம், ஆட்டோ தொழிலாளர்களில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு இன்று வரை நிவாரண நிதி சென்றடையவில்லை. இந்த 10 ஆயிரம் பேருக்கு முடித்த பின் இதர அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் நிவாரண நிதியும், விலையில்லா பொருட்களும் வழங்க வேண்டும். அதற்கு பின் மீண்டும் முதல்வர் அறிவித்தபடி பாக்கி ரூ. 1000த்தையும் அனுப்ப வேண்டும். அப்படியென்றால் குறைந்தபட்சம் இரண்டு மாத காலமாகும்.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, மிக குறைந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை உள்ள தேனி மாவட்ட நிலையே இப்படியென்றால், ஒரு லட்சத்திற்கும் மேல் வாரியத்தில் உறுப்பினராக உள்ள மாவட்டங்கள் எல்லாம் நிவாரண நிதியை வழங்க எத்தனை மாதங்களாகும் என நினைத்தால் பேரதிர்ச்சி தான் ஏற்படும். கொடுப்பது மிகவும் குறைவான தொகை, அதுவும் உரிய காலத்தில் கொடுக்காமல் காலங் கடந்து கொடுப்பது சரியாகுமா? எனவே, தமிழக அரசு கொரோனா பரவல் காலத்தில் தொழிலாளர்கள் சமூக விலகல் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென்று விரும்பினால் உடனடியாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள வங்கி நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு மிக விரைவாக நிவாரண நிதி அனுப்ப வேண்டும்.
தனியார் வங்கிக் கணக்கு எண் கொடுத்துள்ள தொழிலாளர்களுக்கு அந்தந்த வங்கிகளில் பணம் போட அனுமதிக்க வேண்டும். கட்டுமானம், ஆட்டோ தவிர்த்த இதர அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஒரு மாத காலமாகியும் நிவாரண நிதி, விலையில்லா பொருட்கள் கிடைக்காமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு 10 தினங்களுக்குள் நிதியும், பொருட்களும் கிடைக்க தொழிலாளர் துறையில் இப்பணியை முடிக்க, அரசு ஊழியர்களில் உள்ள தன்னார்வலர்களை பயன்படுத்தி முடிக்க வேண்டும். இவற்றை செய்ய காலதாமதம் ஏற்படும் நிலையில் அமைப்புசாரா தொழிலாளர்கள், வாழ்க்கை போராட்டத்தில் சமூக விலகலை மீறி ஊதியம் ஈட்ட ஏதாவது ஒரு வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடாகத்தான் முடியும் என்பதை தமிழக அரசு உணர்ந்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.