tamilnadu

பெட்ரோல் நிறத்தில் குடிநீர்: ஆயக்குடி மக்கள் அவதி

பழனி, மே 23- பழனி ஆயக்குடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு வரதமாநதி அணையில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு செய்து விநியோகம் செய்யப்படுகிறது. ஆயக்குடி பேரூராட்சிப் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே குடிநீர் மாசடைந்து கலங்கிய நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு கடந்த சில மாதங்களாகவே தண்ணீர் பெட்ரோல் போன்ற நிறத்தில் வருகிறது. அதைக் குடிக்கும் மக்களுக்கு சளித்தொற்று, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை. தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. எனவே புதிய சுத்திகரிப்பு இயந்திரத்தை பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.