பென்னாகரம், ஜூன் 3-பென்னாகரம் பேரூராட்சிப் பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர். அதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட 7 வதுவார்டு பகுதி கிருஷ்ணாபுரம் பகுதியில் பாதாள சாக்கடைக்காக பலஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்ட சிமெண்ட் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் பெரும்சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காணப்படுவதால் அப்பகுதியில் போக்குவரத்து மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.இதேபோல், நகரத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகள் இதுவரை சீரமைக்கப்படவில்லை. அவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.