தப்பித்தார் தினேஷ் கார்த்திக்
இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், தமிழக அணியின் கேப்டனுமான தினேஷ் கார்த்திக் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான சுற்றுப் பயணத்தின் போது இந்திய அணி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் கரிபியன் தொடர் நடக்கும் மைதானத்திற்குச் சென்று டிரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணி யின் ஜெர்சியை அணிந்து, அந்த அணி நிர்வாகத்துடன் ஆலோசனை செய்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் நேரலை ஒளிபரப்பில் வெளியாக தினேஷ் கார்த்திக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியது. பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தங்களின் படி எந்த ஒரு வீரரும் முன் அனுமதி பெறாமல் வேறு எந்த விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றல் கூடாது என்பதால் தினேஷ் கார்த்திக்கின் பிசிசிஐ ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கரீபியன் தொடருக்குச் சென்றதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பிசிசிஐ-யின் நோட்டிஸுக்கு மன்னிப்பு கடிதத்துடன் தினேஷ் கார்த்தி பதிலளித்துள்ளார். தினேஷ் கார்த்திக்கின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. தினேஷ் கார்த்திக்கின் பிரச்சனை பெரிதாக முளைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடனடி மன்னிப்பு மூலம் இடியாப்ப சிக்கல் விரைவில் அவிழ்க்கப்பட்டுள்ளது.