tamilnadu

img

தெற்காசியாவின் ‘கில்லி’! - சி.ஸ்ரீராமுலு

வடக்கில் மக்கள் சீனக் குடியரசும் தெற்கு,மேற்கு, கிழக்கு திசைகளில் இந்தியாவை எல்லைகளாகக் கொண்டு இமயமலையின் அடிவாரத்தில் அமைந்தி ருக்கும் நாடு நேபாளம். கடல் மட்டத்திலிருந்து 67 முதல் 300 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயரமான மலைகள், குன்றுகள், புல்வெளி காடுகள் நிறைந்த பகுதியாக இருந்தாலும் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த நாடுகளில் ஒன்றாகும்.

சங்கமம்...

தெற்கில் வெப்பமான மலை அடிவாரத்தையும் வடக்கில் குளிரான இமயமலையை உள்ளடக்கியதும் உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் சுமார் 40 விழுக்காடு மக்கள் வறுமையில் வசிக்கிறார்கள். இந் நாட்டு தலைநகர் காத்மாண்டில் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் பத்து நாட்கள் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த 2,715  வீரர்கள் சங்கமித்தனர். மிக புகழ்பெற்ற தசரத் விளையாட்டரங்கில் நடந்த பிரம்மாண்ட விழாவில் அந்நாட்டுப் பிரதமர் பித்யா தேவி பண்டாரி தெற்காசியாவின் 13வது விளையாட்டுப் போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார். வண்ணமிகு தொடக்க விழாவில் போட்டியில் பங்கேற்ற 8 நாடுகளின் வீரர்களின் அணி வகுப்பில் இந்திய அணி வீரர்கள் குண்டு எறிதல் வீரர் தேஜஸ் பால் சிங் தலைமையில் கம்பீரமாக அணி வகுத்தனர்.

கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அரங்கை அதிர வைத்தன. விளையாட்டு வீரர்களின் அணி வகுப்பும் ரசிகர்களை குஷிப் படுத்தியது. போட்டியின் இறுதி நாளில் அந்தந்த நாட்டு வீரர்கள் தங்களின் தேசியக் கொடிகளுடன் அணிவகுத்து வர 7 ஆயிரத்திற் கும் மேற்பட்ட கலைஞர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் அரங்கில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. கண்கவர் வான வேடிக்கைகளுடன் போட்டிகள் இனிதே நிறைவு பெற்றதும், 2023 ஆம் ஆண்டில் போட்டியை நடத்தும் பாகிஸ்தானிடம் தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் கொடியை முறைப்படி ஒப்படைத்தனர். மறுமுனையில், துவங்கிய விளையாட்டுப் போட்டிகளில் வழக்கம் போல் இந்திய வீரர்களின்  ஆதிக்கம் தொடர்ந்தது.

‘தங்க மழை’...

விளையாட்டுப்போட்டிகள் தொடங்கியதிலிருந்து இந்திய வீரர்களின் பதக்க வேட்டையில் துவங்கியது. ஒரு நாள் மட்டுமே பதக்கப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தனர். அதன் பிறகு நமது வீரர்கள் ‘தங்க மழை’ பொழிந்தனர். குறிப்பாக ஒரே நாளில் 54 தங்கப்பதக்கங்களை வென்று அசத்தினர்.

கலக்கல் ஆட்டத்தால் கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, பேட்மின்டன், டென்னிஸ், தேக்வாண்டா, ஸ்குவாஷ், நீச்சல், கோ-கோ ஆகிய விளையாட்டுகளில்  ஒட்டுமொத்த தங்கத்தையும் இந்திய வீரர்களே அள்ளினர். அதிகபட்சமாக நீச்சலில் 27 தங்கமும், 19 வெள்ளியும், 6 வெண்கலமும் வென்றனர். துப்பாக்கி சுடுதலில் 18 தங்கம், 7 வெள்ளி 4 வெண்கலம், மல்யுத்தத்தில் 14 தங்கம், தடகளத்தில் 12 தங்கம், 27 வெள்ளி, 15 வெண்கலம். குத்துச்சண்டையில் 12 தங்கம், 3 வெள்ளி பதக்கத்தையும் குளித்தனர்.

பென்சிங், உ-சூ போட்டிகளில் தலா 11 தங்கம் 8 வெள்ளி 4 வெண்கலப் பதக்கமும், தேக்வாண்டோ விளையாட்டில் 9 தங்கப்பதக்கமும், 10 வெள்ளி,  4 வெண்கலம், ஜூடோ போட்டியில் 9 தங்கம் 4 வெள்ளியும் வென்றார்கள். சைக்கிளிங் போட்டியில் 4 தங்கப் பதக்கத்தையும் தட்டி வந்தனர்.

அசத்திய தமிழகம்...

ஜெரோம் வினித் தலைமையிலான வாலிபால் ஆண்கள் அணி தங்கம் வென்றது. இந்த அணிக்கு தலைமை தாங்கிய ஜெரோம் வினித் தமிழ் நாட்டை சேர்ந்தவர். அவர் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அருகே உள்ள கோட்டைக்காடு கிராமத்தில் பிறந்தவர். ஊர் திரும்பியதும் சொந்த கிராமத்தில் பொதுமக்களும் விளையாட்டு வீரர்களும், மாணவர்களும் மாலை- மரியாதை, தாரைதப்பட்டைகளுடன் உற்சாக வரவேற்புடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். கூடைப்பந்து விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்த தமிழக வீராங்கனையான தர்ஷினி தஞ்சை மாவட்டம் வாண்டையார் இருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். சென்னையைச் சேர்ந்த கலைவாணி 48 கிலோ எடைப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். 87 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் அனுராதா தங்கப்பதக்கம் வென்றார். தடகளத்தில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் அர்ச்சனாவும், தொடர் ஓட்டத்தில் சந்திரலேகாவும், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் பந்தயத்தில் ஜெ. சுரேந்தரும், மும்முறை தாண்டுதலில் முகமது சலாவுதீனும் தங்கத்தை வென்று கொடுத்தனர். நீளம் தாண்டுதலில் ஆர். சாமிநாதன் வெள்ளிப் பதக்கமும்,400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் டி. சந்தோஷ்குமார் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

ஆதிக்கம்....

சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை துப்பாக்கிச் சூடும் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற 19 வயதான இளம் வீராங்கனை மெகுலி கோஸ் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 253.3 புள்ளிகள் குவித்து உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டினார். குண்டு எறிதலில் தேஜந்தர் பால் சிங், பளு தூக்குதலில் மன்பிரீத் கவுர், மல்யுத்தத்தில் சாக்ஸி மாலிக்,  நீச்சலில் கவுரிகா, வட்டு எறிதலில் நவ்ஜித் கவுர், டேபிள் டென்னிசில் அமல்ராஜ், பேட்மிண்டனில் கிடாம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பிரபலங்களும் தங்கப்பதக்கம் வென்றனர். மகளிர் கால்பந்து வீராங்கனைகள் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கப்பதக்கம் வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தனர். கபடி, கைப்பந்து, டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், வால் சண்டை போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்தமாக தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தனர்.

ராஜாவுக்கு ராஜா!

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம், பூட்டான், மாலத்தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பு நாடுகளாக கொண்டு தெற்காசிய போட்டிகள் 2004 ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை  நடந்து வருகிறது. இதற்கு முன்பு 1984ல் தெற்காசிய கூட்டாட்சியை விளையாட்டு என்ற பெயரில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தி வந்தனர். 1984 ஆம் ஆண்டில் தெற்காசிய கூட்டாட்சி விளையாட்டுப் போட்டி நேபாளம் நாட்டில் தொடங்கியதிலிருந்து13 வது போட்டி வரை தொடர்ந்து பங்கேற்று வரும் இந்தியா 1,274 தங்கம், 744 வெள்ளி, 390 வெண்கலம் என 2,398 பதக்கங்களை குவித்து 13 தொடர்களிலும் பதக்கப் பட்டியலில் முதலிடத்தையும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் தக்க வைத்து புதிய சரித்திரம் படைத்திருக்கிறது. 360 தங்கம், 458 வெள்ளி, 457 வெண்கலம் என 1,357 பதக்கங்களுடன் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தையும், 260 தங்கம்,444 வெள்ளி, 688 வெண்கலம் என்று 1,394 பதக்கங்களுடன் இலங்கை 3வது இடத்திலும் உள்ளது. 130 தங்கத்துடன் 679 பதக்கங்களை இன்றுள்ள நேபாளம் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

சதமடித்த சென்னை...

1995 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நடந்த 7வது தெற்காசிய  இந்த போட்டிக்காக கோயம்பேடு பேருந்து நிலையம் அருகாமையில் ‘தெற்காசிய விளையாட்டு கூட்டமைப்பு நகரம்’ மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டது. அந்த முறை 3290 வீரர்கள் கலந்து கொண்டனர். அதுவரைக்கும் உச்சபட்சமாக 90 தங்கப்பதக்கங்களை வென்றிருந்தஇந்திய வீரர்கள் சென்னையில் 106 தங்கப்பதக்கத்தை அள்ளினர். பின்னர் நடந்த 6 தொடர்களில் ஐந்து முறை 102, 103,118,188,174 என்று தங்கப் பதக்கத்தில் சதம் அடித்தனர். 2016 ஆம் ஆண்டில் 188 தங்கம் வென்று தெற்காசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் புதிய வரலாறு படைத்தனர்.