பரூக் இன்ஜினியர் திடீர் பல்டி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பரூக் என்ஜினீயர் சமீபத்தில் நிறைவு பெற்ற உலக கோப்பை தொடரின் போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு இந்திய அணி தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவர் தேநீர் வழங்கியதாகப் பத்திரிகை பேட்டியில் கூறி முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசினார். இந்த தகவல் இணையத்தில் ஜெட் வேகத்தில் பறக்க வெடித்தது சர்ச்சை.
பரூக் என்ஜினீயரின் குற்றச்சாட்டை அனுஷ்கா மறுத்தாலும், கிரிக்கெட் வல்லுநர்கள் முதல் சாதாரண நெட்டிசன் வரை கிரிக்கெட் உலகிற்கு சம்பந்தமில்லாத உங்களுக்குத் தேர்வுக்குழுவிற்குள் என்ன வேலை என தாறுமாறாக அனுஷ்கா சர்மாவை விமர்சிக்கத் தொடங்கினர். இந்நிலையில், பரூக் என்ஜினீயர் தனது கருத்திலிருந்து திடீரென பின்வாங்கி பல்டி அடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,”இந்திய கிரிக்கெட் அணியின் பிளேஸரை அனுஷ்கா அணிந்திருந்தார் என்பதைத் தான் குறிப்பிட்டேன். அதாவது தேர்வுக்குழுவை விமர்சிக்கும் தோனியில் எதார்த்தமாகத் தான் தெரிவித்தேன். ஆனால் அனுஷ்காவை சர்ச்சை பொருளாக இழுத்துவிட்டார்கள். அனுஷ்காவை அசிங்கப்படுத்த இந்த கருத்தைத் தெரிவிக்கவில்லை இதை அனுஷ்கா சர்மா தவறாக எடுத்துக்கொண்டால், அதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்”எனத் தெரிவித்தார். மூத்த வீரரான பரூக் என்ஜினீயர் சிறந்த ஆளுமைவாதி ஆவார். இந்திய கிரிக்கெட்டில் தனது கணவரின் பெயரை வைத்து அனைத்து தரப்பிலும் ஆதிக்கம் செலுத்த முயலும் நடிகை அனுஷ்காவின் செயலை ஆய்வு மூலம் கட்டுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென பல்டி அடித்துச் சொதப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.